Last Updated : 06 May, 2019 05:34 PM

 

Published : 06 May 2019 05:34 PM
Last Updated : 06 May 2019 05:34 PM

அரசியலில் இருந்து விலகினார் காயத்ரி ரகுராம்: ‘அரசியல்வாதி என்பது வில்லன் கதாபாத்திரம்’ என விமர்சனம்

அரசியலில் இருந்து விலகியுள்ளார் காயத்ரி ரகுராம். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அரசியல் களத்தில் பாஜகவில் இணைந்து பணிபுரிந்து வந்தார் காயத்ரி ரகுராம். சில மாதங்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு உருவானது. இருப்பினும், பாஜகவில் பணிபுரிந்து வந்தார்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் பேச்சை கடுமையாக சாடி அவ்வப்போது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வந்தார் காயத்ரி ரகுராம். மேலும், பிரதமர் மோடியையும் பாராட்டினார். இதனால், அவர் பாஜகவில் இருப்பது உறுதியானது.

இந்நிலையில், இன்று (மே 6) தனது ட்விட்டர் பக்கத்தில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் காயத்ரி ரகுராம். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், “வெறும் வாக்குவாதமும், மற்றவர்களைக் குற்றம் சொல்வதுமாக அரசியல் இன்று மிகவும் தரம் தாழ்ந்துவிட்டது. குழந்தைகள் சண்டை போல உள்ளது.

வழிநடத்த முதிர்ச்சியான தலைவர்கள் இல்லை. உருப்படியாக எதுவும் நடப்பதில்லை. மக்கள் என்ன முடிவெடுத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. நம்மால் இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற முடியுமா? எதுவும் நடப்பது போலத் தெரியவில்லை. யாரையும் ஆதர்சமாகப் பார்க்க முடியவில்லை. இப்போதைக்கு எனக்கு அரசியலில் ஆர்வம் குறைந்து வருகிறது. நமக்காக நான் வருத்தப்படுகிறேன். முடிவில் நாம் நகைச்சுவைப் பொருளாகிவிடுகிறோம். இது எனது தனிப்பட்ட அபிப்ராயம்.

சினிமாவைவிட, அரசியலில் அதிக நடிகர்கள் இருக்கின்றனர். போலியான போராளிகள், போலித் தலைவர்கள், போலித் தொண்டர்கள், போலி உறுப்பினர்கள். இதுதான் கடைசியில் கிடைக்கப் பெறுகிறோம். என்னால் 24 மணி நேரமும் நடித்துக் கொண்டிருக்க முடியாது. நேரம் வரும்போது நான் அர்ப்பணிப்புடனும் உண்மையுடனும் விஸ்வாசத்துடனும் இருப்பேன்.

அரசியல்வாதி என்பது வில்லன் கதாபாத்திரமே. பேராசை, தந்திர புத்தி என எல்லாம் எதிர்மறை விஷயங்களே. நான் இப்போதைக்கு வெளியிலிருந்து அனைத்தையும் பார்த்து, ஆராய்ந்து, இன்னும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். இன்னும் பல விஷயங்களை கற்றுக்கொள்ள கொஞ்சம் இடைவெளி எடுத்துக் கொள்கிறேன். தீவிரமாக இறங்குவதற்கான நேரம் இதுவல்ல. தேவைப்படும்போது நான் செய்கிறேன். இப்போதைக்கு நான் எந்த கட்சியையும் ஆதரிக்கப்போவதில்லை. இது எனது தனிப்பட்ட முடிவு. அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x