Last Updated : 12 May, 2019 10:36 AM

 

Published : 12 May 2019 10:36 AM
Last Updated : 12 May 2019 10:36 AM

நைட் 12 மணிக்கு கவுண்டமணியை ஆலையம்மன் கோயிலுக்கு கூட்டிட்டுப் போய் சாமி கும்பிட வைச்சேன்’’ - பாக்யராஜ் ஓபன் டாக்

’’நைட் 12 மணிக்கு கவுண்டமணியை, ஆலையம்மன் கோயிலுக்குக் கூட்டிட்டுப் போய், சூடம் ஏத்தி சாமி கும்பிட வைச்சேன்’’ என்று பாக்யராஜ் மனம் திறந்து தெரிவித்தார்.

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், தனியார் இணையதளச் சேனலுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அதில் அவர் கூறியதாவது:

‘’’16 வயதினிலே’ படத்தில் பாலகுரு சார் மூலமாக, கவுண்டமணி நடித்தார். படம் முழுவதும் ரஜினியுடன் இருந்தபடி நடித்த அந்தக் கேரக்டரை நன்றாகவே செய்திருந்தார்.

அதற்கு அடுத்த படம்... ‘கிழக்கே போகும் ரயில்’. இந்தப் படத்தில் காந்திமதியின் கணவனாக, பாஞ்சாலி ராதிகாவை அடையத் துடிக்கும் மாமனாக கவுண்டமணியைப் போடலாம் என்று நானும் பாலகுரு சாரும் சொன்னோம்.

‘அடப்போய்யா. அந்த ஆளு வேணாம். வழுக்கைத்தலையா இருக்காரு. அவர் போய், பாஞ்சாலி மேல ஆசைப்படுறார்னு காட்டினா நல்லாருக்காது’ன்னு உறுதியாச் சொன்னார். ‘கிராமத்துக்காரங்ககிட்ட போய் என்ன எதிர்பார்க்கமுடியும்? தவிர, அந்த காமெடி கேரக்டருக்கு கவுண்டமணிதான் செட்டாவார்னு எவ்வளவோ எடுத்துச் சொன்னோம்.

அப்புறம் அந்தக் கேரக்டர்ல நீ நடின்னு என்னைச் சொன்னார் பாரதிராஜா சார். அது சரியா வராது சார். கொஞ்சம் ஆர்டிபீசிஷியலா இருக்கும்னு மறுத்துட்டேன். அதுக்குப் பிறகு, நிறைய பேரை டெஸ்ட் ஷூட் வைச்சார் டைரக்டர். அதுல கவுண்டமணியையும் கூட்டிட்டு வந்து நிக்கவைச்சோம். கவுண்டமணி நடிச்சுக் காட்டும் போதெல்லாம், நானும் பாலகுரு சாரும் எல்லாருமா சேர்ந்து, ஹாஹாஹாஹானு சிரிச்சோம். டைரக்டர் பாரதிராஜா சார் திரும்பி எங்களைப் பாத்தார். ‘இவனைத்தான் நடிக்கவைக்கணும்னு எல்லாரும் சேர்ந்து முடிவு பண்ணிட்டீங்க’ன்னு சொல்லி, ஒத்துக்கிட்டார். கவுண்டமணி நடிச்சார்.

அப்போ, எல்டாம்ஸ் ரோடு 92சில தான் குடியிருந்தேன். பக்கத்துல கவுண்டமணி வீடு. தினமும் வந்துருவாரு. ஓகேயா ஓகேயானு கேட்டுக்கிட்டே இருந்தாரு. அந்தக் கேரக்டருக்கு அவர் ஓகேன்னு முடிவான அன்னிக்கி, அவரைப் பாக்கவே முடியல. ‘ராஜன் (பாக்யராஜ்) வந்தா, எல்டாம்ஸ் ஹோட்டலுக்குப் பக்கத்துலதான் பேசிட்டிருப்பேன்’னு சொல்லிட்டுப் போயிருந்தார். நைட் 12 மணிக்கு கவுண்டமணியைப் பாத்தேன். ‘என்னாச்சு, நான் நடிக்கிறேனா’னு கேட்டார். நான் ஒண்ணுமே சொல்லல. ‘கொஞ்சம் வாங்க போயிட்டு வரலாம்’னு அவரைக் கூட்டிட்டு, தேனாம்பேட்டை ஆலையம்மன் கோயிலுக்குப் போனேன். ஏற்கெனவே சூடம் வாங்கிவைச்சிருந்தேன்.

கோயில் வாசல்ல, சூடத்தைக் கொடுத்து, ஏத்தச் சொன்னேன். ‘இந்தப் படத்துல நீங்க நடிக்கிறீங்க. நல்லா வேண்டிக்கோங்க’ன்னு சொன்னேன். சூடம் ஏத்தி, அம்மனைக் கும்புட்டுட்டு, அழ ஆரம்பிச்சிட்டாரு கவுண்டமணி. ‘ரொம்ப நன்றி ரொம்ப நன்றி’ன்னு சொல்லிக்கிட்டே இருந்தார்.

’கிழக்கே போகும் ரயில்’ படத்துல நடிச்ச அந்தக் கேரக்டர், கவுண்டமணியை எங்கேயோ கொண்டுபோச்சு’’

இவ்வாறு கே.பாக்யராஜ் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x