Last Updated : 09 May, 2019 08:00 PM

 

Published : 09 May 2019 08:00 PM
Last Updated : 09 May 2019 08:00 PM

நன்றி சாவித்திரிமா: ’நடிகையர் திலகம்’ வெளியாகி ஓர் ஆண்டு நிறைவு - கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி

'நடிகையர் திலகம்' வெளியாகி ஓர் ஆண்டு நிறைவையொட்டி, மறைந்த நடிகை சாவித்திரியை நினைவுக் கூர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

‘நடிகையர் திலகம்’ சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநடி’ என்ற பெயரிலும் வெளியானது. 2018-ம் ஆண்டு வெளியான இப்படத்தை நாக் அஸ்வின் இயக்க, சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடித்தார்.

ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான், பத்திரிகையாளராக சமந்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 2018-ம் ஆண்டு மே 9-ம் தேதி இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. கீர்த்தி சுரேஷின் திரையுலக வாழ்க்கையை மாற்றியுள்ள படம் என்று சொல்லலாம்.

இப்படம் வெளியான பிறகு, மிக கவனமாக படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இன்று (மே 9) 'நடிகையர் திலகம்' வெளியாகி ஒரு ஆண்டு நிறைவானதையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

உங்களைப் பற்றி பேசும்போது எனக்கு வார்த்தைகள் கிடைப்பதில்லை. என்னை இந்தப் படத்தில் கொண்டு சேர்த்ததற்கு, அந்தப் பயணம் முழுவதும் கூட இருந்ததற்கு, உங்கள் அன்பையும் ஆசிர்வாதத்தையும் என் மீது பொழிந்ததற்கு நன்றி. நீங்களின்றி இது நடந்திருக்காது. நன்றி சாவித்திரிமா.

நாக் அஷ்வின் - இந்த அற்புதப் படைப்பின் பின்னால் இருந்த மூளை. எனது தன்னம்பிக்கைக்கு பின்னால் இருக்கும் மனிதர். என்னை அதிகம் நம்பிய ஒருவர். இதைவிட நான் வேறென்ன கேட்டுவிட முடியும் நாக்?

ஸ்வப்னா தத்தா, ப்ரியங்கா தத்தா - இதை விட நீங்கள் வலிமை பெற முடியாது. நீங்கள் இரண்டு தூண்கள் தான் அனைத்தையும் தாங்கி நின்றீர்கள். அந்த மோதல்களுக்கு எல்லாம் மதிப்பு கிடைத்திருக்கிறதுதானே?

நீங்கள் திரையில் வரலாற்றை உருவாக்கிவிட்டீர்கள் டானி.

மிக்கி ஜே மேயர் - மஹாநடி பாடலை விட அவருக்கு வேறென்ன காணிக்கையை நீங்கள் அர்ப்பணித்து விட முடியும்?

இவ்வாறு கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x