Published : 17 May 2019 06:50 PM
Last Updated : 17 May 2019 06:50 PM

ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாளப்படம்: ‘லூசிஃபர்’ சாதனை

மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிஃபர்’ படம், 200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

நடிகர் பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமான மலையாளப் படம் ‘லூசிஃபர்’. அரசியல் பின்னணியைக் கொண்ட ஆக்‌ஷன் படமான இதில், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், விவேக் ஓபராய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். முரளி கோபி, படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார்.

கடந்த மார்ச் 28-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. வெளியானதும் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, மாபெரும் வெற்றி பெற்றது. ‘மோகன்லால் ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு விருந்து’ என பலரும் பாராட்டினர்.

திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூலைக் குவித்துள்ள இந்தப் படம், வெளியான எட்டு நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டி, குறைந்த நாட்களில் இந்த வசூலை எட்டிய படம் என்ற சாதனையைப் படைத்தது.

இதற்குமுன், மோகன்லால் நடிப்பில் வெளியான ‘புலி முருகன்’ படமே மலையாளப் படங்களில் முதன்முறையாக 100 கோடி வசூலித்த படம். இதன்பிறகு நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘காயம்குளம் கொச்சுண்ணி’ படம் 100 கோடி ரூபாய் வசூலித்தது. இதில் நாயகனாக இல்லையென்றாலும், மோகன்லால் முக்கியக் கதாபாத்திரத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், உலகம் முழுவதும் 200 கோடி ரூபாயை வசூலித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது ‘லூசிஃபர்’. இதன்மூலம் 200 கோடி ரூபாய் வசூலித்த முதல் மலையாளப் படம் என்ற பெருமையை ‘லூசிஃபர்’ பெற்றுள்ளது.

“இவ்வளவு பெரிய மைல்கல்லை அடைய உதவியாக இருந்த, உலகம் முழுவதுமுள்ள சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் மோகன்லால்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x