Published : 08 May 2019 02:23 PM
Last Updated : 08 May 2019 02:23 PM

மீண்டும் தந்தை - மகனுடன் கைகோத்த ஜெயம் ரவி

ஜெயம் ரவி படத்தில், இரண்டாவது முறையாக தந்தை - மகன் இணைந்து பணிபுரியவுள்ளனர்.

ஜெயம் ரவி நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகிவரும் படம் ‘கோமாளி’. அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு, கோவை சரளா, பிரேம்ஜி அமரன், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைக்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

இது ஜெயம் ரவியின் 24-வது படமாகும். 25-வது படத்தை, லட்சுமண் இயக்குகிறார். ஜெயம் ரவி - லட்சுமண் கூட்டணியில் ஏற்கெனவே ‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க, சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் சண்டைப் பயிற்சி இயக்குநராக ஸ்டன் சிவாவும், நடன இயக்குநராக அவருடைய மகன் கெவினும் பணிபுரியவுள்ளனர். இந்தத் தகவலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஸ்டன் சிவா. இவர்கள் ஏற்கெனவே ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘அடங்க மறு’ படத்தில் ஒன்றாகப் பணிபுரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அஹமது இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ஜெயம் ரவி. இதில் அவருக்கு ஜோடியாக தாப்ஸி நடிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x