Published : 06 May 2019 02:03 PM
Last Updated : 06 May 2019 02:03 PM

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்க அமலா பாலுடன் பேச்சுவார்த்தை

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்க அமலா பாலுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ‘பொன்னியின் செல்வன்’. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். ஆனால், பட்ஜெட் உள்ளிட்ட சில விஷயங்களால் அது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.

தற்போது விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிலரையும், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் என பாலிவுட் நட்சத்திரங்களையும் வைத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கப் போகிறார் மணிரத்னம்.

அதற்கான முன்தயாரிப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை, தன்னுடைய மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளார் மணிரத்னம்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், சுந்தர சோழராக அமிதாப் பச்சன், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தி ஆகியோர் நடிக்கின்றனர்.

பெரிய பழுவேட்டரையராக பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேஷ், பூங்குழலியாக நயன்தாரா நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க அமலா பாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x