Last Updated : 27 May, 2019 06:04 PM

 

Published : 27 May 2019 06:04 PM
Last Updated : 27 May 2019 06:04 PM

பெரும் விலை பேசப்படும் தளபதி 63: தமிழக உரிமையைக் கைப்பற்றக் கடும் போட்டி

விஜய் நடித்துவரும் 'தளபதி 63' படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றக் கடும் போட்டி நிலவி வருகிறது.

'சர்கார்' படத்தைத் தொடர்ந்து, அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் இந்தப் படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை, 'தளபதி 63' என்று அழைக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு, சென்னையில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டு நடைபெறுகிறது. தீபாவளி வெளியீடு என்று படப்பிடிப்பு தொடங்கும்போதே அறிவித்துவிட்டது படக்குழு.

எப்போதுமே விஜய் படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றக் கடும் போட்டி நிலவும். 'மெர்சல்' மற்றும் 'சர்கார்' ஆகிய இரண்டு படங்களுமே தமிழகத்தில் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து, தயாரிப்பாளருக்கு ஷேராக மட்டும் 70 கோடிக்கும் மேல் கிடைத்தது. இதனால் ‘தளபதி 63’ படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றக் கடும் போட்டி நிலவி வருகிறது.

முதலில் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், சில நாட்களில் அதிலிருந்து விலகியது. தற்போது பல படங்களை வெளியிட்டு வரும் ஸ்கிரீன் ஸீன் நிறுவனம், 'தளபதி 63' படத்தின் உரிமையைக் கைப்பற்ற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. முன்பு விஜய் படங்கள் செய்த தமிழக வியாபாரத்தை வைத்து விலை பேசப்பட்டு வருகிறது.

இதனால், இதுவரை விஜய் படங்களின் தமிழக உரிமைக்கு கொடுக்கப்பட்ட விலையைவிடக் கூடுதலாகக் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. அவ்வாறு கொடுக்கப்பட்டால், 'தளபதி 63' திரைப்படம் விஜய் படங்களின் தமிழக வியாபாரத்தில் புதிய மைல்கல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x