Published : 30 May 2019 02:00 PM
Last Updated : 30 May 2019 02:00 PM

ஜூன் 23 முதல் ‘பிக் பாஸ் 3’ ஒளிபரப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு

வருகிற ஜூன் 23-ம் தேதி முதல் ‘பிக் பாஸ் 3’ ஒளிபரப்பாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் கடந்த 2017-ம் ஆண்டு ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. டிவி, செல்போன், பத்திரிகை என எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், 100 நாட்கள் ஒரு வீட்டுக்குள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி. அத்துடன், வீட்டுக்குள்ளேயே பல போட்டிகளும் நடத்தப்படும்.

வருடத்துக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்ச்சியை, கடந்த இரண்டு வருடங்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். 2017-ம் ஆண்டு ஆரவ்வும், 2018-ம் ஆண்டு ரித்விகாவும் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில், மூன்றாவது சீஸன் தொடங்குவதற்கான நேரம் நெருங்கிவிட்டதால், அதைப் பற்றிய பல செய்திகள் ரசிகர்களிடையே பரவி வந்தன. இம்முறை கமல்ஹாசனுக்குப் பதில் நயன்தாரா தொகுத்து வழங்குகிறார் என்றும், விஜய் தொலைக்காட்சிக்குப் பதிலாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது என்றும் கூறப்பட்டது.

மேலும், ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் என சாந்தினி தமிழரசன், ரமேஷ் திலக், டி.ராஜேந்தர், ராதாரவி, கஸ்தூரி உள்ளிட்ட பலரின் பெயர்களும் வெளியாகின. ஆனால், சம்பந்தப்பட்ட அனைவருமே இதை மறுத்துள்ளனர்.

இன்னொரு பக்கம், ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து’ என தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையானதால், கமலுக்குப் பதிலாக வேறொருவர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கலாம் எனத் தகவல் பரவியது. ஆனால், இவை எல்லாவற்றுக்கும் பதில் அளிக்கும் வகையில் 10 விநாடிகள் கொண்ட ப்ரமோவை கடந்த 15-ம் தேதி வெளியிட்டது விஜய் டிவி.

இந்நிலையில், ‘பிக் பாஸ் 3’ ஒளிபரப்பாகும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 23-ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. ‘இது வெறும் ஷோ அல்ல... நம்ம லைஃப்’ என்ற வாசகத்துடன் இம்முறை ஒளிபரப்பாகிறது ‘பிக் பாஸ் 3’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x