Last Updated : 09 May, 2019 03:59 PM

 

Published : 09 May 2019 03:59 PM
Last Updated : 09 May 2019 03:59 PM

களவாணி 2 வெளியீட்டு சர்ச்சை: காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குநர் சற்குணம் புகார்

'களவாணி 2' படத்தின் வெளியீட்டு சர்ச்சை தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குநர் சற்குணம் புகார் அளித்துள்ளார்.

விமல், ஓவியா, சரண்யா பொன்வண்ணன், ஆர்.ஜே.விக்னேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'களவாணி 2'. சற்குணம் இயக்கி, தயாரித்துள்ள இப்படத்தை வெளியிடத் தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

'களவாணி 2' படத்தின் வெளியீட்டுக்குத் தடை விதிக்கப்பட்டாலும், அதை எதிர்த்து வாதாடி தடையைத் தகர்த்தார் இயக்குநர் சற்குணம். ஆனால், தொடர்ச்சியாக 'களவாணி 2' வெளியீட்டுக்குத் தடை ஏற்படுத்துபவர்கள் மீது இயக்குநர் சற்குணம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

'' 'களவாணி 2' படத்தை நான் தயாரித்து இயக்க முடிவெடுத்தேன். இதற்காக 'களவாணி 'படத்தின் தயாரிப்பாளர்களிடம் உரிய அனுமதியைப் பெற்று, 'களவாணி  2' படம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் என் பெயரின் கீழ் பதிவு செய்யப்பட்டது.

'களவாணி' படத்தில் நடித்த விமல் தான் 'களவாணி 2' படத்திலும் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. இந்நிலையில், ஓ கம்ரான் மற்றும் சிங்காரவடிவேலன் ஆகிய இரண்டு பேருக்கு, விமலுடன் ஏதோ பணப் பிரச்சினை உள்ளது. அந்தப் பணத்தை என் படத்தின் வெளியீட்டைத் தடுப்பதன் மூலம் என்னிடமிருந்து மிரட்டிப் பெற திட்டமிட்டுள்ளனர்.

கம்ரான் மற்றும் சிங்காரவடிவேலன் இருவரும் சேர்ந்து, விமல் தான் ’களவாணி 2’ படத்தைத் தயாரிக்கிறார் என்பது போலவும், படத்தின் உரிமையை சிங்காரவடிவேலனுக்கு மாற்றிவிட்டதாகவும், அவரிடமிருந்து படத்தின் விநியோக உரிமையை கம்ரான் வாங்கிவிட்டதாகவும் போலியாக ஆவணங்கள் தயார் செய்துள்ளனர்.

அந்தப் போலி ஆவணங்களை வைத்து படத்துக்கு 22.04.2019 அன்று இடைக்காலத் தடை உத்தரவைப் பெற்றுள்ளனர். இது குறித்து தெரிந்தவுடன் உடனடியாக இந்தத் தடை உத்தரவை நீக்கக் கோரி வழக்கு தொடுத்து எனக்கு சாதகமாக 25.04.2019 அன்று தீர்ப்பும் வந்தது.

நான் தான் ’களவாணி 2’ படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர். படத்தின் அனைத்து விதமான உரிமைகளும் என்னிடம் தான் உள்ளன. நான் எந்த உரிமையையும் விமலுக்கோ, மேற்குறிப்பிட்ட மற்ற இரண்டு நபர்களுக்கோ மாற்றவில்லை. ஆனாலும், இந்த இருவரும் தொடர்ந்து போலி ஆவணங்கள் மூலம் படத்தின் வெளியீட்டைத் தடுக்க முயற்சிக்கின்றனர். இது எனக்கு பண நஷ்டத்தோடு துறையில் எனது பெயருக்கும் களங்கம் விளைவித்துள்ளது.

மேலும், தெரிந்தே இந்த போலி ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, ஏமாற்றி ஆணை வாங்கியுள்ளனர். கம்ரான் தனது வழக்கறிஞர்கள் மூலம் என் படத்தை அவர்கள் அரங்கில் திரையிடக்கூடாது என நீதிமன்றம் கொடுத்ததாக ஒரு போலி ஆவணத்தை உருவாக்கி நோட்டீஸ் மூலம் மிரட்டி வருகிறார். விநியோகஸ்தர்களையும் மிரட்டியுள்ளனர்.

படத்தை வெளியிட வேண்டுமென்றால் விமல் தரவேண்டிய பணத்தை நான் தர வேண்டும் என, சிங்காரவடிவேலன் மற்றும் கம்ரானின் அடியாட்கள் என்னை பல முறை மிரட்டியும் உள்ளனர்.

இவர்கள் தடுத்து நிறுத்தப்படும் வரை நான் எனது படத்தை வெளியிட முடியாது. இதனால் எனக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படும். எனது படத்தை நான் வெளியிட முடியாதவாறு மிரட்டல்களையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கிறேன்.

எனவே ’களவாணி 2’ படம் பாதுகாப்பாக வெளியாவதை உறுதி செய்வதோடு எனக்கும் எனது தயாரிப்பு நிறுவனத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும். சிங்காரவடிவேலன் மற்றும் கம்ரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு இயக்குநர் சற்குணம் புகாரில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x