Published : 27 Apr 2019 06:14 PM
Last Updated : 27 Apr 2019 06:14 PM

சந்தானம் இல்லாத குறை தெரியக்கூடாது என்பதற்காக நிறைய மெனக்கெட்டுள்ளோம்: சிவகார்த்திகேயன்

சந்தானம் இல்லாத குறை தெரியக்கூடாது என்பதற்காக நிறைய மெனக்கெட்டுள்ளோம் என ‘Mr. லோக்கல்’ படம் குறித்துப் பேசியுள்ளார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘Mr. லோக்கல்’. எம்.ராஜேஷ் இயக்கியுள்ள இந்தப் படம், முழுவதும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்க, ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரோபோ சங்கர், சதீஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம், மே 17-ம் தேதி வெளியாகிறது.

வழக்கமாக எம்.ராஜேஷ் படங்கள் என்றாலே சந்தானத்தின் பங்கு அதிகமாக இருக்கும். கிட்டத்தட்ட நாயகனுக்கு இணையாக சந்தானம் கதாபாத்திரமும் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், தற்போது சந்தானம் ஹீரோவாக மட்டுமே நடிப்பதால், காமெடியனாக நடிப்பதில்லை.

இதுகுறித்து சிவகார்த்திகேயனிடம் கேட்டபோது, “சந்தானம் அண்ணா இல்லாத குறை தெரியக்கூடாது என்பதற்காக மெனக்கெட்டுள்ளோம். யோகி பாபு, ரோபோ சங்கர், சதீஷ்  மூவரும் இயல்பிலேயே திறமைசாலிகள். மக்களின் அபிமானத்தைப் பெற கடுமையாக உழைத்தவர்கள்.

எனக்கும் கொஞ்சம் நகைச்சுவை வரும் என்பதால், ராஜேஷ் பெரும்பாலான காட்சிகளில் இந்த மூவரும் இருக்குமாறு திரைக்கதையை அமைத்துள்ளார். படத்தில் டாஸ்மாக் காட்சியோ, பாடலோ இல்லை. கதைக்கு அது தேவைப்படவில்லை. என்னை வைத்துப் படம் எடுப்பதால் ராஜேஷும் அதைச் சேர்க்க வேண்டும் என எண்ணவில்லை. குடும்பமாக வந்து படம் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x