Published : 29 Apr 2019 10:10 AM
Last Updated : 29 Apr 2019 10:10 AM
''ரஜினியால எல்லாருமே வேணாம்னு சொல்லிட்டாங்க’’ என்று ‘சிவாஜி’ படத்தயாரிப்பு அனுபவங்களை ஏவிஎம்.சரவணன் பகிர்ந்துகொண்டார்.
ஏவிஎம்.சரவணன், தனியார் இணையதளச் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
கிட்டத்தட்ட திரைத்துறைக்கு வந்து 60 வருடங்களாகிவிட்டன. அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, என்.டி.ஆர்னு ஐந்து முதல்வர்களுடன் பணியாற்றிய அனுபவம் உண்டு.
அன்றைய காலகட்டம் போல், இப்போது திரைப்படத் தயாரிப்பு இல்லை. அப்போது கதையை முடிவு செய்துவிட்டு, நடிக நடிகையரைத் தேர்வு செய்வோம். ஆனால், இப்போது நடிகர்கள், கதையை, தயாரிப்பு நிறுவனத்தை, இயக்குநரைத் தேர்வு செய்கிறார்கள். வேறுவிதமாக மாறிவிட்டது சினிமா. இதை சரிதப்பு என்றெல்லாம் சொல்லமுடியாது. அப்படிச் சொல்லுவதற்கு நாம் யார்? இப்போதைய இந்த மாற்றங்களை, ஒரு பார்வையாளனாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான். காலம் கனியும் தருணம் வரும்போது, ஏவிஎம் நிறுவனம் படமெடுக்கும்.
‘சிவாஜி’ படத்தின் படப்பிடிப்பு, ஏவிஎம்மில் நடந்தது. அப்போது, ரஜினி, ஷங்கர், மற்றும் உள்ள முக்கிய நடிகர், நடிகை என பலருக்கும் கேரவன் வாடகைக்கு எடுத்து வந்து நிறுத்தப்பட்டது.
ரஜினி ஒரு காட்சியில் நடித்துவிட்டு வந்தவுடன், அவருடைய கேரவனைக் காட்டி, ‘இங்கே நீங்க ரெஸ்ட் எடுக்கலாம் சார்’ என்றார்கள்.
அதைக் கேட்ட ரஜினி, ‘எதுக்கு கேரவன்? அவுட்டோர்னா பரவாயில்ல. இங்கே ஸ்டூடியோல எதுக்கு? இங்கே வழக்கமா ரூம் தருவீங்களே. அதுபோதும்’ என்றார்.
‘பரவாயில்ல சார். கேரவன் புக் பண்ணியாச்சு. வந்தாச்சு. அதுலயே ரெஸ்ட் எடுங்க சார்’னு சொன்னோம். ஆனா ரஜினி பிடிவாதமா மறுத்துட்டார். ‘முதல்ல கேரவனை கேன்சல் பண்ணுங்க. அப்பதான், நான் அடுத்த சீன்ல நடிப்பேன்’னு கறாராச் சொன்னாரு.
அப்படியே செஞ்சோம். ரஜினியோட இந்த முடிவால, ஷங்கர்லேருந்து எல்லாருமே கேரவன் வேணாம்னு சொல்லிட்டாங்க. அதான் ரஜினி. அதான் ரஜினியோட சிம்பிள்.
இவ்வாறு ஏவிஎம்.சரவணன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT