Last Updated : 04 Apr, 2019 06:41 PM

 

Published : 04 Apr 2019 06:41 PM
Last Updated : 04 Apr 2019 06:41 PM

ரூ.1000 கோடியில் திட்டமிடப்பட்ட ‘மகாபாரதம்’: கைவிடப்பட்டதாக அறிவிப்பு

ரூ.1000 கோடியில் திட்டமிடப்பட்ட ‘மகாபாரதம்’ படத்தைக் கைவிட்டுவிட்டதாக தயாரிப்பாளர் ரகுராம் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

பீமனின் பார்வையிலிருந்து மகாபாரத்தை 'ரண்டமூழம்' என்ற தலைப்பில் நாவலாக எழுதியவர் எம்.டி.வாசுதேவன் நாயர். இந்த நாவல் பல்வேறு விருதுகளை வென்றது மட்டுமல்லாமல், பல்வேறு மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

இந்த நாவலை மையமாக வைத்து வி.ஏ.ஸ்ரீகுமார் மேனன் படமாக இயக்க முடிவு செய்தார். இதனை சுமார் 1000 கோடி ரூபாய் பொருட்செலவில் ஐக்கிய அரபு எமிரேட்டில், ''யு.ஏ.இ. எக்ஸ்சேஞ்ச் மற்றும் என்.எம்.சி. ஹெல்த்கேர்'' எனும் நிறுவனத்தின் நிறுவனர் ரகுராம் ஷெட்டி தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதில் நாயகனாக நடிக்க மோகன்லால் ஒப்பந்தமானார்.

இந்தியாவில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படும் படம் என்ற சாதனை மட்டுமல்லாது, ஹாலிவுட் படங்களைத் தவிர்த்து அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படும் படம் என்ற சாதனையையும் நிகழ்த்தியது. இதன் பணிகள் 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இரண்டு பாகங்களில் முதல் பாகம் 2020-ல் வெளியாகும் என்றும் அறிவித்தனர்.

தற்போது இப்படம் கைவிடப்பட்டதாக தயாரிப்பாளர் ரகுராம் ஷெட்டி அறிவித்துள்ளார். இதற்கு எம்.டி.வாசுதேவன் நாயர் மற்றும் வி.ஏ.ஸ்ரீகுமார் மேனன் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ''நான் இன்னும் நல்ல கதாசிரியருக்காகக் காத்திருக்கிறேன். கண்டிப்பாக எடுப்பேன். அதற்கான ஈடுபாடு என்னிடம் உள்ளது. ஒரு உண்மையான இந்தியனாக, நமது வரலாற்றை உலகம் முழுவதும் அனைத்து மொழிகளிலும் எடுத்துச் செல்ல நான் இந்த படத்தை எடுக்கிறேன்'' என்றும் குறிப்பிட்டுள்ளார் ரகுராம் ஷெட்டி.

இந்த அறிவிப்பு மலையாளத் திரையுலக ரசிகர்கள், மோகன்லால் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x