Published : 13 Apr 2019 12:53 PM
Last Updated : 13 Apr 2019 12:53 PM

"சுமாரான நடிப்பை கொண்டாட வேண்டாம்" - அலியாவை மீண்டும் சீண்டிய கங்கணா

சுமாரான நடிப்பைக் கொண்டாடுவதை நிறுத்துங்கள், இல்லையென்றால் தரம் உயரவே உயராது என அலியா பட்டின் நடிப்பை குறித்து கங்கணா ரணவத் பேசியது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இணையதளம் ஒன்று யார் சிறந்த நடிகை என்ற கருத்துக்கணிப்பை நடத்தியது. இதில் கங்கணா வெற்றி பெற்றார். அவரை விட 3-4 சதவித ஓட்டுகள் குறைவாகப் பெற்ற அலியா இரண்டாவது இடத்தைப் பெற்றார். ’கல்லி பாய்’ படத்தில் அலியாவின் நடிப்பை பாராட்டியே அவருக்கு ஓட்டுகள் வந்திருந்தன.

இதுகுறித்து வெற்றி பெற்ற கங்கணாவிடம் கேட்டபோது, "எனக்கு தர்மசங்கடமாக உள்ளது. கல்லி பாய் படத்தில் நடிப்பு அப்படி என்ன சிறப்பாக இருந்தது? எப்போதும் போல ஒரே மாதிரியான நடிப்பு தான். பாலிவுட்டில் பெண்கள் முன்னேற்றம், ஆக்ரோஷமான பெண், நல்ல நடிப்பு என்பதற்கெல்லாம் தனி விளக்கம் உள்ளது.

தயவு செய்து எனக்கு இந்த தர்மசங்கடத்தைத் தராதீர்கள். ஊடகங்களுக்கு சினிமா குழந்தைகள் மீதான பாசம் அளவு கடந்து போய்விட்டது. சுமாரான நடிப்பைப் கொண்டாடுவதை நிறுத்துங்கள். இல்லையென்றால் நடிப்புக்கான தரம் எப்போதும் உயராது" என்று பதிலளித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள அலியா, "நான் கங்கணாவின் நடிப்பை மதிக்கிறேன், அவரது கருத்தையும் தான். அவருக்கு ஒரு விஷயம் அப்படித் தோன்றுகிறது என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கும் தானே. இதற்கு பதிலாக, ராஸி பார்த்துவிட்டு எனது நடிப்பை அவர் எப்படிப் பாராட்டினார் என்பதை நான் நினைவில் வைத்துக்கொள்வேன். எனது வேலையை கவனம் சிதறாமல் செய்வேன். ஒருவேளை நான் இன்னும் கடுமையாக உழைத்தால் அவர் என்னை மீண்டும் பாராட்டுவார் இல்லையா" என அலட்டாமல் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னரே, ’மணிகார்னிகா’ பட சர்ச்சையின் போது அலியா உள்ளிட்ட நடிகைகள் தனக்கு ஆதரவு தராதது குறித்து கங்கணா சாடிப் பேசியிருந்தார். தற்போது மீண்டும் அலியாவின் நடிப்பைப் பற்றி கங்கணா குறை கூறியுள்ளது பாலிவுட்டில் பலரையும் கங்கணாவின் தொடர் தாக்குதல்களுக்கான காரணத்தை யோசிக்க வைத்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x