Published : 30 Apr 2019 12:39 PM
Last Updated : 30 Apr 2019 12:39 PM

விசாகன் பதில் சொல்லட்டும்: சொர்ணா சேதுராமன் அறிக்கைக்கு இயக்குநர் நவீன் பதிலடி

தயாரிப்பாளர் சொர்ணா சேதுராமனின் குற்றச்சாட்டுக்கு விசாகன் பதில் கூறட்டும் என்று இயக்குநர் நவீன் தெரிவித்துள்ளார்.

‘மூடர் கூடம்’ படத்தைத் தொடர்ந்து நவீன் இயக்கியுள்ள படம் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’. இந்தப் படத்திலும் அவரே ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். முழுவதும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு, கே.ஏ.பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். நடராஜன் சங்கரன் இசையமைக்க, யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார்.

ஏப்ரல் 19-ம் தேதி வெளியாகவிருந்த இப்படம், திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. இதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் இருந்தது. இது தொடர்பாக இயக்குநர் நவீன் வெளியிட்ட அறிக்கையில், 'அலாவுதீனின் அற்புத கேமரா' படத்துக்கு முன்பாக ஒப்பந்தமான படத்தில் என்ன நடந்தது, அதன் தயாரிப்பாளர் சொர்ணா சேதுராமன் என்ன செய்தார் உள்ளிட்டவற்றை தெரிவித்தார்.

இயக்குநர் நவீனின் இக்குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக தயாரிப்பாளர் சொர்ணா சேதுராமன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தான் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட பட விஷயமாக நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளதாகவும் சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பதை விட்டுவிட்டு, அறிக்கை கொடுத்து ஊடகங்கள் மூலமாக இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி திசைதிருப்பி, இதிலிருந்து விடுபட நவீன்  திட்டமிடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், சொர்ணா சேதுராமனின் இந்தக் குற்றச்சாட்டுக்கு, இயக்குநர் நவீன் பதிலளித்துள்ளார். இதுகுறித்து இன்று (ஏப்ரல் 30) தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

”பத்து மாதங்களாக நான் ஸ்கிரிப்ட் எழுதாமல் ஓப்பியடித்ததாக சொர்ணா சேதுராமன் சார் சொல்கிறார். இதுக்கு நான் பதில் சொல்வதைவிட, 4 மணி நேரம் ஸ்கிரிப்ட் கேட்டுட்டு, 'இப்படி ஒரு கதையை ஹாலிவுட்டில் கூட நான் பார்த்ததில்லை’ என்று கூறிய விசாகன் பதில் சொல்வதுதான் சரியாக இருக்கும்.”

இவ்வாறு நவீன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x