Last Updated : 23 Apr, 2019 04:39 PM

 

Published : 23 Apr 2019 04:39 PM
Last Updated : 23 Apr 2019 04:39 PM

நட்சத்திர கிரிக்கெட் வீரர்களின் ரசிகர்கள் மோதல்: சித்தார்த் வேதனை

இணையத்தில் தொடர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் மோதல் தொடர்பாக சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் கொஞ்சம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு போட்டியில் யாராவது ஒருவர் நன்றாக விளையாடிவிட்டால், உடனடியாக இணையத்தில் அவரது ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அதிலும் முக்கியமாக சென்னை அணி விளையாடும் போது, தோனியின் கேப்டன்சி, தோனியின் பேட்டிங், தோனியின் ஃபீல்டிங் என இணையத்தில் கொண்டாடித் தீர்ப்பார்கள்.

சமீபத்தில் டெல்லி அணியுடனான போட்டியில், தோனியின் பேட்டிங் என்பது கோலியை மிரளவைத்தது. இதனை அவரும் பேட்டியில் வெளிப்படுத்தினார். ஆனால், இந்தப் போட்டியால் இணையத்தில் இரண்டு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே ஒரு போட்டியை உருவாக்கிவிட்டது.

இந்தப் போட்டி மற்றும் ஒப்பீடு தொடர்பாக சித்தார்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''விளையாட்டு மனப்பாங்கைக் கடந்து எந்த ஒரு கிரிக்கெட் ரசிகன் இரண்டு வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்களையும் ஒப்பீட்டளவில் யார் சிறந்தவர் என்று சீர்தூக்க முயற்சிக்கிறானோ அவனை கயவன் என்றே நான் சொல்வேன். டி20 கிரிக்கெட் என்பது முழுவதுமாக வித்தியாசமானது. சச்சின், ரிச்சர்ட்ஸ், டிராவிட், சேவாக், கோலி, தோனி என இன்னும் பல கிரிக்கெட் வீரர்களும் அவர்களுக்கே உரித்தான பாணியில் சிறப்பானவர்கள். இந்த தனிச்சிறப்பு கிரிக்கெட் வரலாற்றில் ஒன்றுடன் ஒன்று இணைந்து இருக்க வாய்ப்பில்லை.

நவீன கால கிரிக்கெட்டில் யாராவது ஒரு தனிநபரை மட்டும் போற்றுவது என்ற பழக்கத்தை கண்மூடித்தனமாக ஊக்குவிக்கிறது. இது குழந்தைத்தனமானது. எதிரணி வீரர்களுக்காக யாரும் கை தட்டி உற்சாகப்படுத்துவதில்லை. குழந்தைகள் கிரிக்கெட் மைதானத்துக்குச் சென்றால் தான் விரும்பும் அணி வென்றாலே திருப்தி கொள்கின்றன. கிரிக்கெட் விளையாட்டின் சாராம்சத்தை அழிக்கும் அளவுக்கு போட்டி மனப்பான்மை உருவாகிறது.

இந்த விளையாட்டின் மீது எத்தகைய அன்பைச் செலுத்த வேண்டும் என்பதைத் தொடர்ந்து நாமே நமக்கு நினைவு கூர வேண்டும். சச்சின் - கிரிக்கெட்டின் கடவுள், டிராவிட் - அதன் சுவர், கோலி - கிங் கோலி, தோனி - கேப்டன் கூல். இனி இதுபோன்ற தன்மை கொண்ட கிரிக்கெட் வீரர்கள் வரமாட்டார்கள். இவர்கள் எல்லோரும் தனிச்சிறப்பானவர்கள். இவர்களைப் போல் வேறு தனிச்சிறப்புகள் கொண்ட வீரர்களும் இருக்கின்றனர். அவர்களையும் நாம் கொண்டாடுவோம்.

ஒருவரை மட்டுமே புகழ்தல் என்பது அடுத்தவர்களை இகழ்வது ஆகாது. ஆனால் சமூக வலைதளங்களில் கிரிக்கெட் வீரர்களை முன்வைத்து நடத்தப்படும் விவாதங்கள் தரம் தாழ்ந்து வருகின்றன. பெரிய நட்சத்திரங்களின் விசிறிகளுக்கு இடையேயான இந்தப் போர் இலக்கற்றது. இது அர்த்தமற்றதும் கூட. ஆனால், மனவேதனை தருகிறது'' என்று தெரிவித்துள்ளார் சித்தார்த்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x