Published : 06 Sep 2014 10:27 AM
Last Updated : 06 Sep 2014 10:27 AM

முன்னாள் காதலிக்கு 21,000 முறை தொலைபேசி அழைப்பு: தொல்லை செய்தவருக்கு சிறை

பிரான்ஸில் முன்னாள் காதலிக்கு தொடர்ந்து 21,807முறை தொலை பேசியில் அழைத்தும் எஸ்எம்எஸ் அனுப்பியும் தொல்லை செய்த 33 வயது இளைஞருக்கு 10 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட் டுள்ளது.

தெற்கு பிரான்ஸைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஆசிரியையாகப் பணிபுரியும் 32 வயது பெண்ணை காதலித்துள்ளார். அவரை கடந்த 2011-ம் ஆண்டு பிரிந்ததிலிருந்து பெரும் மன உளைச்சலுடன் காணப்பட்டுள்ளார். அதனால் ஏற்பட்ட மன நெருக்கடிக்கு சிகிச்சையும் பெற்றுள்ளார்.

முன்னாள் காதலியின் அடுக்கு மாடிக் குடியிருப்பை இவர் புனரமைத்துள்ளார். எனவே, அதற்கான செலவுத் தொகையைத் தர வேண்டும் அல்லது நன்றி சொல்ல வேண்டும் எனக் கூறி தொடர்ந்து தொலைபேசியில் அழைத்தும், குறுஞ்செய்தி அனுப்பியும் வந்துள்ளார். சராசரியாக தினமும் 73 முறை அழைத்துள்ளார். 10 மாதங்கள் இவ்வாறு தொடர்ந்து தொலைபேசியில் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

அந்த இளம்பெண், முன்னாள் காதலரின் தொலைபேசி எண்ணை ‘பிளாக்’ செய்ய முயன்றுள்ளார். ஆனால், இளைஞரோ அப்பெண் பணிபுரியும் இடத்துக்கும், பெற்றோருக்கும் தொலைபேசியில் அழைப்பு விடுத்து பேசியுள்ளார்.

இதைத் தொடர்ந்து புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டது. பின்னர் ஆலோசகர்கள் பேசியதை அடுத்து, அப்பெண் நன்றி கூறினார். இதைத் தொடர்ந்து அப்பெண்ணுக்கு இனி தொலைபேசியில் அழைக்க மாட்டேன் என்று தெரிவித்தார். அப்பெண்ணுடன் தொடர்பு கொள்ளக் கூடாது என்ற நீதிமன்றத்தின் உத்தரவையும் அவர் ஏற்றுக் கொண்டார். இருப்பினும் தொடர்ந்து தொந்தரவு செய்த அவருக்கு 10 மாத சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x