Last Updated : 09 Mar, 2019 01:00 PM

 

Published : 09 Mar 2019 01:00 PM
Last Updated : 09 Mar 2019 01:00 PM

மகளிர் தினத்தை முன்னிட்டு மீம்ஸில் கிண்டல்: ஆத்மிகா கடும் சாடல்

மகளிர் தினத்தை முன்னிட்டு மீம்ஸ் மூலமாக கிண்டல் செய்ததைக் குறிப்பிட்டு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆத்மிகா கடுமையாக சாடியுள்ளார்.

தமிழ் சினிமாவில் 'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா. அதனைத் தொடர்ந்து 'நரகாசூரன்', 'காட்டேரி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது உதயநிதி நடித்து வரும் 'கண்ணை நம்பாதே' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு மீம்ஸ்கள் நேற்று (மார்ச் 8) சமூகவலைத்தளத்தில் வலம் வந்தது. இதில் வடிவேலு, விவேக், விக்ரம் ஆகியோர் பெண் கெட்டப்பில் உள்ள படத்துடன், ஆத்மிகா படமும் இடம்பெற்றிருந்தது. ஆணைப் போல இவர் இருக்கிறார் என்ற தொனியில் இந்த மீம் அமைந்திருந்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்த மீம்மை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ஆத்மிகா கூறியிருப்பதாவது:

படத்தில் இத்தகைய ஜாம்பவான்களுடன் என்னை ஒப்பிட்டதற்கு முதற்கண் மகிழ்ச்சி தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி! இரண்டாவதாக, இந்தப் பதில் உங்களுக்காக மட்டுமல்ல உங்களைப் போன்ற மனநிலை உள்ள அனைவருக்குமானதே.

இந்தப் படத்தில் நான் நன்றாக இல்லை என்று உணர்வதாக நீங்கள் நினைக்கிறீர்களா, அல்லது என்னைப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறதா?  எனக்கு இரண்டுமாகவும் இல்லை.  ஆனால் உங்களைப் பற்றி நான் தவறாகவே நினைக்கிறேன், காரணம் ஒரு ஆணோ பெண்ணோ தோற்றத்தில் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு மனநிலை உங்களிடம் சிறுவயது முதலே வளர்ந்து வந்துள்ளது, சகோதரரே தோற்றம் முக்கியமல்ல.

உண்மையில் நீங்கள் உடல் ரீதியாக எவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். நீங்கள் ரித்திக் ரோஷன் போல் இருந்தாலும்  நீங்கள் அசிங்கமாகன மனிதர் என்றே நான் நினைப்பேன், காரணம் உங்களுக்கு  அழகான இதயம் இல்லை, அடுத்தவர்களை நோகடித்து அதில் மகிழ்ச்சியடைபவர்.

நீங்கள் குணமடையவும் அழகு என்பது அகத்திலிருந்து வருவது என்பதையும் நீங்கள் உணர நான் பிரார்த்திக்கிறேன். என்னைப் பற்றி பிற லட்சக்கணக்கானோர் நினைப்பதற்கு மாறாக உள்ளது உங்கள் கருத்து. எப்படியிருந்தாலும் ஒரு பெண் தான் எப்படியிருக்கிறாளோ அதற்காகவும் அவளது நடை, உடை, பாவனைகள், தோற்றம் ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் இழிவு படுத்துவதற்கு எதிராக நான் எழுதுகிறேன். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு மகளிர் தினத்தன்று நான் வாய்மூடி இருக்க முடியாது. இன்னொரு பெண்ணுக்கு இவ்வாறு நடக்க நான் அனுமதிக்க முடியாது.

நீங்களாகட்டும் அல்லது யாராகட்டும் ஒரு பெண்ணின் தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்க முடியாது. உயரமா குட்டையா, வெள்ளையா கருப்பா, குண்டா ஒல்லியா, அசிங்கமா, அழகா என்பதை நீங்கள் தீர்மானிக்கக் கூடாது, ஒவ்வொருவரும் தனித்துவமாக அவர்கள் வழியில் அழகானவர்களே.

நாங்கள் ஆண்களை தோற்றத்தைக் கொண்டு முடிவு செய்வதில்லை, அவர்கள் எப்படி எங்களை மதிக்கிறார்கள், நடத்துகிறார்கள் என்பதை வைத்தே முடிவெடுக்கிறோம். காரணம் அவர்களது தனித்துவத்துக்காகவே நாங்கள் ஆண்களை மதிக்கிறோம்.  கடவுள் எங்களுக்கு இதைக் கொடுத்துள்ளார், இருப்பதைக்கொண்டு மகிழ்ச்சியடைய எங்களுக்குத் தெரியும்.  உங்கள் தாயார், சகோதரிகள் அல்லது உங்களுடன் தொடர்புடைய எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் அவர்கள் எப்படியிருக்கிறார்களோ அதற்காக மதிப்புக் கொடுக்க கற்றுக் கொள்ளுங்கள்.

தைரியம் அச்சமின்மை, தன்னம்பிக்கை இவைதான் என் அழகு. ஹேப்பி உமன்’ஸ் டே பிரதர்.  (நீங்கள் ஆணாகத்தான் இருக்க வேண்டுமென்றே நான் நிச்சயமாகக் கருதுகிறேன், ஏனெனில் பெண்கள் ஒருவரையொருவர் காயப்படுத்தவோ காலைவாரவோ செய்ய மாட்டார்கள். இன்று நீங்கள் புகழ்பெற காரணமாக இருந்ததுதான் நான் உங்களுக்குக் கொடுக்கும் பரிசு. இதற்குத்தானே ஆசைப்பட்டாய். பத்திரம்.

இவ்வாறு ஆத்மிகா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x