Published : 13 Mar 2019 10:18 AM
Last Updated : 13 Mar 2019 10:18 AM

சிவகார்த்திகேயன் - மித்ரன் இணையும் ஹீரோ

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்துக்கு 'ஹீரோ' என்று தலைப்பிட்டு, படப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ராஜேஷ் இயக்கத்தில்  உருவாகி வரும் 'Mr.லோக்கல்'  படத்தின் பணிகளை முடித்துவிட்டார் சிவகார்த்திகேயன். தற்போது ரவிக்குமார் இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இது பெரும் பொருட்செலவில் உருவாகும் படம் என்பதால், நீண்ட நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு.

இதற்கிடையே 'இரும்புத்திரை' இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிவகார்த்திகேயன். அப்படத்தின் பணி இன்று (மார்ச் 13) படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 'ஹீரோ' என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு.

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தில் அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா ஆகியோர் சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஜார்ஜ் வில்லியம்ஸ் இசையமைக்க, யுவன் இசையமைக்கவுள்ளார். இப்படத்துக்கான பாடல் பணிகளை இயக்குநரோடு இணைந்து யுவன் முடித்துள்ளார்.

இப்படம் அறிவிக்கப்பட்ட போது, 24 ஏ.எம் நிறுவனத்துடன் இணைந்து கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பதாக இருந்தது. தற்போது படப்பூஜை புகைப்படங்கள் எதிலுமே 24 ஏ.எம் நிறுவனத்தின் லோகோ இடம்பெறவில்லை. இதன் மூலம், இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோ மட்டுமே தயாரிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

'ஹீரோ' படத்தின் பணிகளுக்கு இடையே, சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கும் தேதிகள் ஒதுக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x