Published : 26 Mar 2019 03:38 PM
Last Updated : 26 Mar 2019 03:38 PM

விஷால் - சுந்தர்.சி படம் அப்டேட்: துருக்கியில் ஷூட்டிங் தொடக்கம்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங், துருக்கியில் தொடங்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

விஷாலை வைத்து ‘மத கஜ ராஜா’ மற்றும் ‘ஆம்பள’ என இரண்டு படங்களை இயக்கியுள்ளார் சுந்தர்.சி. இதில், ‘மத கஜ ராஜா’ இன்னும் ரிலீஸாகவில்லை. இந்தப் படத்தில், விஷால் ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.

இந்நிலையில், மூன்றாவது முறையாக விஷால் - சுந்தர்.சி கூட்டணி இணைந்துள்ளது. விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.

இதில், விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இருவரும் ஏற்கெனவே ‘கத்தி சண்டை’ படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஜனவரி மாதமே இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், என்ன காரணத்தினாலோ இதுவரை தொடங்கவில்லை. இருந்தாலும், இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றியுள்ளது ஜீ தமிழ்.

இந்நிலையில், துருக்கியில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமான காட்சிகளை அங்கு 50 நாட்களுக்குப் படம்பிடிக்க உள்ளனர்.

விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x