Last Updated : 25 Mar, 2019 10:53 AM

 

Published : 25 Mar 2019 10:53 AM
Last Updated : 25 Mar 2019 10:53 AM

பாதிக்கப்பட்டால் மட்டுமே குரல் கொடுப்பது துணிச்சல் அல்ல: சித்தார்த் கோபம்

பாதிக்கப்பட்டால் மட்டுமே குரல் கொடுப்பது துணிச்சல் அல்ல என்று சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கோபமாக பதிவிட்டுள்ளார்

ஹாலிவுட்டில் ஆரம்பிக்கப்பட்ட மீடூ ஹேஷ்டேக் இந்தியாவில் தொடர்ந்தது. இதில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டது. இதில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய புகார் பெரும் சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் சுசி கணேசன், நடிகர் அர்ஜுன் ஆகியோர் மீது மீ டூ புகார்கள் வந்தன.

இதனைத் தொடர்ந்து கடும் சர்ச்சைக்கு உள்ளானார் சின்மயி. தொடர்ச்சியாக வைரமுத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, அவருடைய பேச்சை வைத்து தனது ட்விட்டர் பக்கத்தில் சாடி வந்தார் சின்மயி.

ஆனால், சமீபகாலாமக இந்தப் புகார்கள் நீர்த்துப் போய் வந்தன. மேலும், முன்னணி நடிகைகள் யாருமே மீடூ ஹேஷ்டேக் தொடர்பாக யாரும் கருத்து தெரிவிக்கவில்லை என்று சித்தார்த் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக சித்தார்த் கூறியிருப்பதாவது:

மீ டூ இயக்கத்தைப் பற்றி எனது துறையின் ஒட்டுமொத்த பெண்ணினமும் மவுனம் காத்தபோது எனக்கு அதிர்ச்சியே நிலவியது. தூங்கிக் கொண்டிருப்பவர்களைத் தட்டி எழுப்ப ஒரு சக்தி வாய்ந்த பெண்ணின் கோபத்தால் மட்டுமே இயலும் என்ற உண்மை என்னை வருத்தத்தில் ஆழ்த்தியது.

நீங்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே தான் அநியாயத்துக்காக குரல் கொடுப்பீர்கள் என்றால் அது துணிச்சலே அல்ல. பாதுகாப்பற்ற உணர்வால் பலம் பொருந்திய பெண்கள்கூட மீடூ பற்றி பேசாமல் இருந்திருந்தீர்கள் என்றால் நீங்களும் குற்றவாளிகள்தான்.

மீடூ இயக்கத்தைப் பற்றி ஆணாதிக்க சிந்தனையுடன் பேசியவர்களுக்கு நிகரானவர்தான் நீங்களும். பாலின பாகுபாடின்றி ஒவ்வொரு நபரும் பொறுப்பை ஏற்க வேண்டும். குறிப்பாக பெண்களின் மனக் குமுறலுக்கு எதிராக மவுனம் காத்த பெண்கள் இதனை கவனிக்க வேண்டும். சில நேரங்களில் வெளிப்படையாக தெரிந்த ஒன்றைக்கூட நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டியுள்ளது.

இவ்வாறு சித்தார்த் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x