Published : 21 Feb 2019 05:18 PM
Last Updated : 21 Feb 2019 05:18 PM

இரட்டை வேடங்களில் ரஜினிகாந்த்?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில், இரட்டை வேடங்களில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்தது. நவாஸுதின் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். அனிருத் இசையமைத்தார்.

‘பேட்ட’ படத்துக்குப் பிறகு தன்னுடைய இரண்டாவது மகள் செளந்தர்யாவின் திருமண வேலைகளில் பிஸியாக இருந்தார் ரஜினி. செளந்தர்யாவுக்கு கடந்த 11-ம் தேதி திருமணம் முடிவுற்றது. எனவே, அடுத்த படத்தில் கவனம் செலுத்தப் போகிறார் ரஜினி.

ரஜினியின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ‘பேட்ட’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் அனிருத்தே இசையமைப்பார் என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்தில், நயன்தாராவை ஹீரோயினாக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே ‘சந்திரமுகி’ படத்தில் ரஜினி ஜோடியாக நடித்த நயன்தாரா, ‘சிவாஜி’ படத்தில் அவருடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடினார். மேலும், ‘குசேலன்’ படத்திலும் இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சமூக ஆர்வலராக ஒரு கதாபாத்திரத்திலும், போலீஸ் அதிகாரியாக மற்றொரு கதாபாத்திரத்திலும் ரஜினி நடிக்க இருப்பதாகக் கூறுகின்றனர்.

ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘எந்திரன்’ படம்தான் ரஜினி இரட்டை வேடங்களில் நடித்த கடைசிப்படம். அதன்பிறகு வெளியான ‘2.0’ படத்தில் மூன்று வேடங்களில் ரஜினி நடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x