Published : 10 Feb 2019 07:56 PM
Last Updated : 10 Feb 2019 07:56 PM

சின்னத்திரை உதவி இயக்குநர்களுக்கு சம்பள நிர்ணயம்: பாக்யராஜ் வலியுறுத்தல்

சின்னத்திரை உதவி இயக்குநர்களின் உண்ணாவிரதத்துக்கு உறுதுணையாக இருப்பேன். அவர்களுக்கு சம்பள நிர்ணயம் செய்ய வேண்டும் என்று இயக்குநர் பாக்யராஜ் வலியுறுத்தினார்.

சின்னத்திரையில் பணிபுரியும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், உதவி இயக்குநர்களுக்கு மட்டும் எந்தவிதமான ஒப்பந்தமும் இதுவரை போடவில்லை. இந்த சூழலில் உதவி இயக்குநர்களுக்கு உரிய சம்பளத்தை பெற்றுத்தர, சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரத அறவழிப் போராட்டம் இன்று சேப்பாக்கம்,  அரசு விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்றது.

இந்த உண்ணாவிரதத்தில் இயக்குநர் பாக்யராஜ், முன்னாள் ஃபெஃப்சி தலைவர் நடராஜ், ராதாரவி, கே.எஸ். ரவிகுமார், சினி மியூசிக் யூனியன் தலைவர் தீனா, K.ராஜன், நடராஜன், சின்னத்திரை இயக்குநர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பாக்யராஜ் பேசியதாவது:

''உதவி இயக்குநர்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது இயக்குநர்கள் தான். எங்களுக்கு உதவி இயக்குநர்கள் தேவை என்று இயக்குநர்கள் தான் பேசி புரிய வைக்க வேண்டும். ஒரு தொடருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சம், ரூ.1.5 லட்சம் என்று கொடுக்கிறார்கள். சில தொடர்களுக்கு ரூ.75 ஆயிரம் கூட பெற்றுக்கொண்டு எடுக்கிறார்கள். ஆகையால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இதற்கு என்னால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வேன்.

வெள்ளித்திரையாக இருந்தாலும் சரி சின்னத்திரையாக இருந்தாலும் சரி ஒரு சிலருக்கு தான் மார்க்கெட் இருக்கிறது. அப்படி மார்க்கெட் இருக்கிறவர்கள் தங்களுடைய உதவி இயக்குநர்களுக்கு ஒரு கணிசமான தொகையை அளிக்க வேண்டும். இந்தத் தொகையை வைத்துக்கொண்டு அவர்களை ஒரு சிறிய வீடு கூட கட்ட முடியாது.  கார் வாங்க முடியாது. ஒரு சிறிய இரண்டு சக்கர வாகனம் வாங்கி மகிழ்வதற்கு ஏற்ற வகையில் ஊதியம் கொடுக்க வேண்டும். எவ்வளவு ஊதியம் பெறுகிறார்கள் என்று தெரியாமல் இருப்பது வருத்தத்திற்குரியது. சின்னத்திரை உதவி இயக்குநர்களுக்கு சம்பள நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

இந்த அடையாள உண்ணாவிரதம் யாருக்கும் எதிரானது அல்ல. எங்களுடைய கஷ்டத்தை எல்லோருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே நடத்தப்படுகிறது. நான் இதற்கு உறுதுணையாக இருப்பேன்''.

இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x