Published : 19 Feb 2019 05:42 PM
Last Updated : 19 Feb 2019 05:42 PM

“என் சினிமா வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா”: தமன்னா பெருமிதம்

‘என் சினிமா வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா’ என ‘கண்ணே கலைமானே’ பத்திரிகையாளர் சந்திப்பில் பெருமிதத்துடன் பேசினார் தமன்னா.

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கண்ணே கலைமானே’. உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், ஹீரோயினாக தமன்னா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரத்தில் வடிவுக்கரசி, வசுந்தரா ஆகியோர் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். வருகிற 22-ம் தேதி (வெள்ளிக்கிழமை) இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இதனை முன்னிட்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு பேசிய தமன்னா, “ஒரு வருடத்துக்கு முன்னர் இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர், இந்தப் படத்துடனும், மொத்தக் குழுவுடனும் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இன்று காலை, வேறு ஒரு புதிய படத்தைப் பார்ப்பது போல் இருந்தது. நான் மிகவும் திருப்தியடைந்தேன்.

சீனு ராமசாமி சார், படத்தில் பல உணர்வுகளைக் கையாண்டுள்ளார். சப்-டைட்டில் இல்லாமல் பார்த்தால் கூட இந்தப் படத்தின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும், அதை விரும்பவும் முடியும் என நான் நம்புகிறேன். இன்னமும் பாரதி கதாபாத்திரம் எனக்குள் இருக்கிறது.

வழக்கமாக, நாம் ஒன்றாக வேலை செய்யலாமா என்று எந்த ஒரு ஹீரோவிடமும் நான் கேட்பதில்லை. ஆனால், ‘இப்போது உங்களின் அடுத்தடுத்த படங்களில் நடிக்க என்னைப் பரிசீலனை செய்யுங்கள்’ என சீனு ராமசாமி சாரிடம் கோரிக்கை வைக்கிறேன்.

யுவன் ஷங்கர் ராஜா, என் சினிமா வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கிறார். பாடல்களும், படத்தில் கதாபாத்திரங்கள் போலத்தான் இருக்கும். ஒளிப்பதிவாளர் ஜலந்தர் சார் என்னை மிகவும் அழகாகக் காட்டியுள்ளார். இந்தப் படத்தைத் தயாரித்த உதயநிதி சாருக்கு என் நன்றி. சீனு சார் குறுகிய காலத்துக்குள் இத்தகைய ஒரு அழகிய படத்தை எடுத்திருப்பதைப் பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x