Published : 06 Feb 2019 05:04 PM
Last Updated : 06 Feb 2019 05:04 PM

காவல்துறைக்கும் மக்களுக்கும் இடைவெளி இருக்கிறது: விஜய் சேதுபதி வேதனை

காவல்துறைக்கும் மக்களுக்கு ஏதோ ஒரு இடைவெளி இருந்துகொண்டே இருக்கிறது என்று விஜய்சேதுபதி வேதனையுடன் குறிப்பிட்டார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் 'டிஜிகாப் (DIGICOP)' என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிசிடிவி கேமரா அமைப்பதன் அவசியம் குறித்து தயாரிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு குறும்படம் மற்றும் சென்னை பெருநகர காவல் துறையில் உள்ள காவல் நிலையங்களில் புதுப்பொலிவுடன் விளங்கும் காவல் நிலையங்கள் பற்றி தயாரிக்கப்பட்டுள்ள  குறுந்தகடு ஆகியவையும் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட முக்கியமான காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு குறந்தகடுகளை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியதாவது:

''இந்த செயலியில் உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் காவல்துறையும், அதிலிருக்கும் அதிகாரி யார் என்பது வரை சொல்கிறது. அது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கிறேன். பிரச்சினை என்றால் யாரைத் தேடிப் போவது என்ற ஒரு விஷயம் இருக்கிறது. அப்போது பக்கத்தில் ஒரு காவல்துறை அலுவலகம் இருக்கிறது என்றாலே ஒரு நிம்மதியைக் கொடுக்கும் என நினைக்கிறேன். DIGICOP செயலியை உருவாக்கியுள்ள அனைவருக்கும் என் நன்றி.

ரொம்ப நாளாகவே வருத்தப்பட்ட ஒரு விஷயம். காவல்துறை அலுவலகத்துக்குச் செல்லும் போது ஒரு பயத்தைக் கொடுக்கும். என்னைப் பொறுத்தவரை முன்பு அங்கு முன்னால் இருக்கும் பழைய வாகனங்கள் ஒரு வகையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அது ஏன் என்றே தெரியவில்லை. இப்போது அதெல்லாம் நீக்கி, மிகவும் அழகாக மாற்றியுள்ளனர். அதைப் பார்க்கும் போதே ரொம்ப அழகாக இருக்கிறது.

காவல்துறை அலுவலகத்துக்கு வருபவர்களுக்கு ஒரு நம்பிக்கை பிறப்பது போல் இருக்கிறது. இந்த முயற்சிக்கு வித்திட்ட அதிகாரிகளுக்கு என் பாராட்டுகள். இது வெறும் வாகனங்களை அப்புறப்படுத்தப்பட்ட விஷயமாக மட்டும் பார்க்கவில்லை. அங்கு வரும் மனிதர்களுக்கு நிம்மதியைக் கொடுக்கும் விஷயமாக பார்க்கிறேன். நம்பிக்கையை விதைப்பதாகவும் பார்க்கிறேன்.

ஒரே ஒரு வேண்டுகோள். இன்னமும், காவல்துறைக்கும் மக்களுக்கு ஏதோ ஒரு இடைவெளி இருந்து கொண்டே இருக்கிறது. எப்படி மக்களிடையே காவல்துறை செயலி குறித்தும், சிசிடிவி கேமரா குறித்தும் ஒரு விழிப்புணர்வு நடந்தப்படுகிறதோ அதே மாதிரி காவல்துறை குறித்தும் விழிப்புணர்வு நடத்தப்பட வேண்டும். அது நடக்கும் என ஆசைப்படுகிறேன். இன்னமும் பலருக்கு அணுகுவதே பயத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயமாகவே இருக்கிறது''.

இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x