Published : 18 Jan 2019 12:29 PM
Last Updated : 18 Jan 2019 12:29 PM

என் கதைக்கு விஜய்தான் சரியாக இருப்பார்: தி ஹைவே மாஃபியா நூல் ஆசிரியர் கருத்து

என் கதைக்கு தமிழில் விஜய்தான் சரியாக இருப்பார் என்று 'தி ஹைவே மாஃபியா' ஆசிரியர் சுசித்ரா தெரிவித்துள்ளார்.

எழுத்தாளரான சுசித்ரா ராவ், 'தி ஹைவே மாஃபியா' (கால்நடைகள் கடத்தல் தொடர்பான கதை) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் அரசியல் கலந்த த்ரில்லர் பின்னணியைக் கொண்டதால் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இந்தப் புத்தகம் தற்போது சென்னை புத்தகக் கண்காட்சியிலும் விற்பனையில் உள்ளது.

இந்நிலையில் இது குறித்து தனியார் ஆங்கில ஊடத்துக்கு அளித்த நேர்காணலில் சுசித்ரா ராவ் கூறுகையில், ''எனது கதையை திரைப்படமாக மாற்றும் எண்ணம் உள்ளது. அவ்வாறு இருப்பின் தமிழில் கதையின் நாயகனான அர்ஜுன் கதாபாத்திரத்துக்கு விஜய்யும், தெலுங்கில் மகேஷ் பாபுவும், கன்னடத்தில் யாஷும் பொருத்தமாக இருப்பார்கள்'' என்றார்.

விஜய் ஏன் இந்தக் கதைக்குப் பொருத்தமாக இருப்பார் என்று விஜய் ரசிகர்கள் சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அவர், ''தமிழில் விஜய் என் கதைக்குச் சரியாக இருப்பார் என்று நினைக்கிறேன். விஜய்யிடம் அந்த ஸ்டைல் இருக்கிறது. விஜய்யைத் தவிர எனது புத்தகத்தின் ஹீரோ  கதாபாத்திரத்துக்கு யாரும் என் நினைவுக்கு வரவில்லை. இந்தக் கதையை தமிழில் வெற்றிமாறன் அல்லது பி.எஸ். மித்ரன் இயக்கினால் சரியான தேர்வாக இருக்கும்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x