Last Updated : 30 Jan, 2019 06:48 PM

 

Published : 30 Jan 2019 06:48 PM
Last Updated : 30 Jan 2019 06:48 PM

மம்மூட்டி மிகச்சிறந்த நடிகர் என்பதற்கு பேரன்பு உதாரணம்: நிவின் பாலி புகழாரம்

மம்மூட்டி ஏன் மிகச்சிறந்த நடிகர் என்பதற்கு 'பேரன்பு' உதாரணம் என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார் நிவின் பாலி.

ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி, சாதனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பேரன்பு'. தமிழ் மற்றும் மலையாளத்தில் பிப்ரவரி 1-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலருக்கும் 'பேரன்பு' திரையிட்டுக் காட்டப்பட்டது. தற்போது 'பேரன்பு' படம் தொடர்பாக நிவின் பாலி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

'' 'பேரன்பு' நெஞ்சைத் தொடும் அழகோடு இருக்கிறது. நீங்கள் பார்க்க விரும்பும் அனைத்தும் படத்தில் உள்ளன. உணர்ச்சிகளும் அதன் வெளிப்பாடுகளும் மிக அழகாக படம்பிடிக்கப்பட்டுள்ளன. நமது மனதைப் படம் மொத்தமாகக் கொள்ளை கொள்கிறது.

மம்மூட்டியின் சிறந்த நடிப்பைப் பார்க்க வேண்டும் என்றால் இதுதான் நீங்கள் பார்க்க வேண்டிய படம். நமது சகாப்தத்திடமிருந்து அற்புதமான, அட்டகாசமான நடிப்பு. அவர் ஏன் மிகச்சிறந்த நடிகர், நாம் ஏன் அவரால் ஈர்க்கப்படுகிறோம் என்பதற்கு இந்தப் படம் ஓர் உதாரணம்.

அவரது மகளாக நடித்த சாதனா அற்புதமான நடிப்பைத் தந்திருக்கிறார். அனுபவமிக்க அஞ்சலி, அஞ்சலி அமீர் இருவரும் தனிச் சிறப்புடன் இருக்கிறார்கள். நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய ஒரு படம் 'பேரன்பு'. திரையில் மாயாஜாலத்தைப் பரிசளித்த இயக்குநர் ராமுக்கு நன்றி''.

இவ்வாறு நிவின் பாலி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x