Published : 02 Jan 2019 07:04 PM
Last Updated : 02 Jan 2019 07:04 PM
விஜய் குறித்த தகவல்களை, ஊடகங்களில் பேசுவது, விவாதிப்பது, பங்கேற்று கருத்து கூறுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவோரின் கருத்துகளை யாரும் நம்பவேண்டாம் என்று விஜய் மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
'சர்கார்' இசை வெளியீட்டில் விஜய் பேசியதிலிருந்து, அவரைப் பற்றிய அரசியல் விவாதங்கள் தொலைக்காட்சியில் இடம்பெற்றன. இதில் பலரும் கலந்து கொண்டு விஜய் பற்றிய தங்களுடைய கருத்துகளை எடுத்துரைத்தார்கள். இதில் விஜய்யிடம் மக்கள் தொடர்பாளராகப் பணிபுரிந்த பி.டி.செல்வகுமாரும் கலந்துகொண்டு தன்னுடைய கருத்துகளைக் கூறினார். 'புலி' படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவர் பி.டி.செல்வகுமார் என்பது நினைவுகூரத்தக்கது.
இந்நிலையில், பி.டி.செல்வகுமார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசும் போது "விஜய் தான் எப்போதுமே நம்பர் 1. ரஜினி மற்றும் அஜித் எல்லாம் நம்பர் 2 தான்" என்று பேசினார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சை உருவானது.
இது தொடர்பாக அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ''முன்னாள் மக்கள் தொடர்பாளராக நீண்டகாலம் நல்ல விதமாகப் பணிபுரிந்தவர் தற்போது வேறு சில காரணங்களால் அப்பணியில், விஜய்யுடன் இல்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளேன். மேலும், அவர், நமது மக்கள் இயக்கத்தில் யாதொரு பொறுப்பையும் இதுநாள் வரை வகிக்கவில்லை !
இருப்பினும், விஜய் பெயரைப் பயன்படுத்தி ஒரு சிலர், அவர்களது சொந்தக் கருத்தை, விஜய் கருத்தைப் போல் ஊடகங்களில் வெளியிடுவதை விஜய் ஏற்கவில்லை என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.
அதோடு, விஜய் எந்த காலகட்டத்திலும், எச்சூழலிலும், சக நடிகர்களையோ, பொது மனிதர்களையோ, இழிவாக, தரம் தாழ்ந்தோ, ஒப்பிட்டுப் பேசியதில்லை ! அப்படி யாரையும் பேசச் சொல்லி யாருக்கும் விஜய் அதிகாரம் அளிக்கவில்லை என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
ஆகவே, விஜய் குறித்த தகவல்களை, ஊடகங்களில் பேசுவது, விவாதிப்பது, பங்கேற்று கருத்து கூறுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவோரின் கருத்துகளை யாரும் நம்பவேண்டாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT