Last Updated : 06 Dec, 2018 11:30 AM

 

Published : 06 Dec 2018 11:30 AM
Last Updated : 06 Dec 2018 11:30 AM

உலக அளவில் 500 கோடியைக் கடந்தது 2.0 வசூல்: லைகா நிறுவனம்

உலக அளவில் '2.0' படத்தின் வசூல் 500 கோடியைத் தாண்டிவிட்டதாக லைகா நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினி, அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் '2.0'. ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

தமிழ் மொழிப் பதிப்பின் வசூலை விட தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் நல்ல வசூல் செய்து வருகிறது '2.0'. முதல் நாள் வசூலால் சிறிய கலக்கமடைந்த படக்குழு, அதனைத் தொடர்ந்து வந்த வசூலால் மிகவும் சந்தோஷத்தில் உள்ளது.

தற்போது இரண்டாவது வாரத்தை நெருங்கியிருக்கும் சமயத்தில், '2.0' திரைப்படம் உலக அளவில் 500 கோடியைக் கடந்திருப்பதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இதனால், ரஜினி ரசிகர்கள் கடும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் 500 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது '2.0'.

மேலும், 2019-ம் ஆண்டு மே மாதம் சீனாவிலும் '2.0' படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. அங்கு திட்டமிட்டப்படி வெளியானால், வசூல் மேலும் அதிகரிக்கும். இதனால் புதிய மைல்கல்லை '2.0' படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x