Last Updated : 20 Dec, 2018 09:23 AM

 

Published : 20 Dec 2018 09:23 AM
Last Updated : 20 Dec 2018 09:23 AM

நான் பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி: மனிஷா

‘ஒரு குப்பைக் கதை’ படத்தை அடுத்து நட்டி, யோகி பாபு நடிக்கும் ‘சண்டி முனி’ படத்தில் நாயகியாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார், மனிஷா யாதவ். அவருடன் ஒரு நேர்காணல்:

படத்தின் பெயரே சொல்கிறதே, இது திகில் பின்னணிப் படம்தானே?

காமெடி, குடும்ப சென்டிமென்ட் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திகில் படம்தான் ‘சண்டி முனி’. கிட்டத்தட்ட 70 சதவீதப் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படத்தில் பழனிதான் முக்கிய களம். நட்ராஜ், யோகிபாபுவோட நான் இணைந்து நடிச்சிருக்கும் காட்சிகள் எல்லாம் கலகலப்பா இருக்கும். படத்தில் டீச்சரா வர்றேன். மெச்சூரிட்டியான ரோல். முதல் தடவையா ஏ,பி,சி-ன்னு எல்லா சென்டர் ஆடியன்ஸுக்கும் பிடிக்கும்படியா என்னோட கதாபாத்திரம் இருக்கும்.

உங்கள் ஒவ்வொரு படத்துக்கும் பெரிய இடைவெளி ஏன்?

இன்றைக்கு பரபரப்பா இருக்கும் முன்னணி ஹீரோக்கள் படமா இருந்தாலும் எனக்கு கதைதான் முக்கியம். அதனாலதான் இந்த இடைவெளி. இப்பவும் வெளியே போகும்போது ‘வழக்கு எண் 18/9’ ஆர்த்தின்னும் ‘ஆதலால் காதல் செய்வீர்’ ஸ்வேதான்னும் கூப்பிடுறாங்க. இப்போ எல்லாம் மனிஷா, பெட்டரா இருந்தாத்தான் கதையை செலெக்ட் செய்வாங்கன்னு சினிமா மக்களுக்கும் தெரிய ஆரம்பிச்சுடுச்சு. அது எனக்கு இன்னும் நல்ல விஷயமாப் படுது.

கதை கேட்பதில் உங்களுக்கென ஏதாவது ஒரு பாணி வைத்திருக்கிறீர்கள்?

எவ்வளவு பெரிய கமர்ஷியல் படமாக இருந்தாலும், எப்பவுமே நாம பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரி ஒரு ரோலில் நடிக்கும்போதுதான் ரசிகர்கள் அவங்களோட கனெக்ட் செய்துப்பாங்க. ‘வழக்கு எண் 18/9’, ‘ஒரு குப்பைக் கதை’, இப்போ நடித்துகொண்டிருக்கிற ‘சண்டி முனி’ படங்களில் எல்லாம் ஏதாவது ஒரு வித்தியாசம் தெரியும். தொடர்ந்து அதுதான் என் பாணியாக கருதுகிறேன்.

பிற நடிகர், நடிகைகள் நடிக்கும் படங்களில் கவர்ச்சி பின்னணியிலான பாடல்களில் முகம் காட்டுகிறீர்களே?

‘சென்னை 28’ இரண்டாம் பாகத்தில் வந்த ‘சொப்பன சுந்தரி’ பாட்டைத்தானே சொல்றீங்க? ரசிகர்களின் வரவேற்பு அதிகமாக இருக்குமென்றால் ஒரு படத்தின் பாடல் காட்சியில் மட்டும்கூட தாராள மாக நடிக்கலாம். அதை ஒரு பகுதியாகத் தான் பார்க்கணும். புதிய ஐடியா, நல்ல இயக்குநர், அதில் நமக்கும் பெயர் கிடைக்குமென்றால் கண்டிப்பா அதில் நடிப்பேன்.

நாயகியை மையம் கொண்ட கதைகள் வருவது அதிகரித்து வருகிறதே. உங்களுக்கு அந்த மாதிரியான கதைகள் நடிக்கும் ஆர்வம் இல்லையா?

ஒரு பெரிய ஹீரோவை வைத்து ஒரு படம் பண்ணும்போது இருக்குற தலையிடல்கள் மாதிரி, நாயகியை மையமாக வைத்து படம் பண்ணும்போது இருப்பதில்லைன்னு வெளியே பேச கேள்விப்பட்டிருக்கேன். நாயகியை ஹீரோவாக்கும்போது நல்லா யோசிக்க முடியுதுன்னு சொல்றாங்க. இது வரவேற்க வேண்டிய ஒன்றுதான். என்னதான் இருந்தாலும் கதைதான் இங்கே ஹீரோ. அது இயக்குநர் கையில்தான் இருக்கு. கதை விஷயத்தில் எந்த சமரசமும் கூடாது. அதில் நான் தெளிவா இருக்கேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x