Published : 29 Dec 2018 05:01 PM
Last Updated : 29 Dec 2018 05:01 PM

டப்பிங் யூனியனிடமும் ராதாரவியிடமும் மன்னிப்பு கேட்க நிர்பந்திக்கப்படுகிறேன்: சின்மயி

கடந்த 2 ஆண்டுகளாக சந்தா தொகை செலுத்தாத்தால், தென்னிந்திய சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக சின்மயி சமூக வலைதளங்களில் தெரிவித்தார். பின்னர், டப்பிங் யூனியனின் தலைவராக இருக்கும் ராதாரவிக்கும் சின்மயிக்கும் இடையிலான பிரச்சினையாக மாறியது.

இந்நிலையில், ஒன்றரை லட்சம் முன் பணம் கொடுத்து, மன்னிப்புக் கடிதம் கொடுத்து, புது உறுப்பினர் படிவம் கொடுத்தால் பாடகி சின்மயியை மீண்டும் டப்பிங் யூனியனில் புது உறுப்பினராகச் சேர்த்துக் கொள்வோம் என டப்பிங் யூனியன் நிர்வாகிகள் அறிவித்தனர்.

இதற்குப் பதில் அளித்துள்ள சின்மயி, “ரூ.1.5 லட்சம் பணம், அத்துடன் மன்னிப்புக் கடிதம். இவற்றை டப்பிங் யூனியனுக்கு அளித்தால் மட்டுமே நான் மீண்டும் தமிழ்ப் படங்களில் பணியாற்ற முடியுமாம். 2006-ல் இருந்து எனது வருமானத்தின் மூலம் டப்பிங் யூனியன் நிறையவே பணம் சம்பாதித்திருக்கிறது. ஆனால், எனது பணிக்கான உரிமையைப் பெற நான் ரூ.1.5 லட்சம் செலுத்த வேண்டுமாம்.

பெரிய நடிகர்கள், இயக்குநர்கள் எல்லாம் ஒன்றிரண்டு படங்களுக்குப் பேசிவிட்டாலே டப்பிங் யூனியனின் வாழ்நாள் உறுப்பினர்கள் ஆகிவிடுகிறார்கள். ஆனால், நான் 2006-ல் இருந்து பணியாற்றியும்கூட டப்பிங் யூனியனில் புதிய உறுப்பினராகியுள்ளேன்.

எதற்காக நான் டப்பிங் யூனியனிடமும் ராதாரவியிடமும் மன்னிப்பு கேட்க நிர்பந்திக்கப்படுகிறேன்? டப்பிங் யூனியன் விதிப்படி புதிய உறுப்பினராகச் சேர ரூ. 2500 தான் தொகை. ஆனால், என்னிடம் ரூ.1.5 லட்சமும் மன்னிப்பும் கேட்பதேன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x