Published : 31 Dec 2018 07:13 PM
Last Updated : 31 Dec 2018 07:13 PM

சீமான் இயக்கத்தில் சிம்பு:  பேச்சுவார்த்தையில் புதிய கூட்டணி

சீமான் இயக்கத்தில் சிம்பு நடிக்க புதிய படமொன்று பேச்சுவார்த்தையில் இருக்கிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகிவரும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தில் கவனம் செலுத்தி வந்தார் சிம்பு. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் ரம்யாகிருஷ்ணன், மஹத், கேத்ரீன் தெரசா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இப்படம் ஜனவரி இறுதி வெளியீடாக திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் 'மாநாடு' படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிம்பு. அவரது பிறந்த நாளான பிப்ரவரி 3-ம் தேதி படப்பூஜையுடன் படம் தொடங்கப்படவுள்ளது.

'மாநாடு' படத்தைத் தொடர்ந்து சீமான் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் சிம்பு. இதனை சீமான் அளித்துள்ள பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார். இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பார் என்று தகவல் வெளியாகவுள்ளது. ஆனால், அனிருத் இசையமைப்பாளர் என்பதை சீமான் உறுதிப்படுத்தவில்லை.

சீமான் - சிம்பு இணையும் படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிகிறது. சமீபகாலமாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார் சீமான். சிம்பு படத்தின் மூலமாக தற்போது இயக்கத்துக்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x