Last Updated : 17 Dec, 2018 01:58 PM

 

Published : 17 Dec 2018 01:58 PM
Last Updated : 17 Dec 2018 01:58 PM

சிக்கலில் தனுஷ் இயக்கும் படம்: சர்கார் காரணமா?

தனுஷ் இயக்கத்தில், அவரே நாயகனாக நடித்து வந்த படம் தயாரிப்பு பிரச்சினையில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

'மாரி 2' படத்தின்  பணிகளை முடித்துவிட்டு, தான் இயக்கி, நாயகனாக நடிக்கும் படத்தின் பணிகளைத் துவக்கினார் தனுஷ். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க முன்வந்தது.

தென்காசியில் தொடங்கப்பட்ட முதற்கட்ட படப்பிடிப்பில் ஸ்ரீகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினார் தனுஷ். அதனைத் தொடர்ந்து சென்னையில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணிகளைத் தொடங்கினார் கலை இயக்குநர் முத்துராஜ். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு, ஷான் ரோல்டன் இசை என படத்தின் பணிகளும் நடைபெற்று வந்தது. தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டார்கள்.

இந்நிலையில், 'மெர்சல்' படத்திலும் முந்தைய படத்தின் கடன்களை அடைக்கவே சரியாக இருந்ததால், எந்தவொரு பணமுமே வரவில்லை. புதிதாக ஏதாவது படம் வாங்கி வெளியிடலாம் என்று திட்டமிட்டு, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பேசி 'சர்கார்' தமிழக உரிமையைக் கைப்பற்றியது தேனாண்டாள் பிலிம்ஸ்.

இதிலும் பல சிக்கல்களை சந்தித்துள்ளது தேனாண்டாள் பிலிம்ஸ். மேலும், சில கோடிகளைக் கொடுக்காமல் இருந்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் என்பதால், தங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்துக்கு என்ன பதில் என்று பலமுறை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இறுதியாக, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பணம் இல்லாததால் அவர்களால் தர இயலாது என்பதை சன் பிக்சர்ஸ் உணர்ந்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்த படங்களின் உரிமைகளை சன் பிக்சர்ஸ் தங்களது தொலைக்காட்சிக்கு எழுதி வாங்கிக் கொண்டது.

தங்களுடைய படத்துக்கு பணம் கொடுப்பார்கள், படப்பிடிப்புக்கு சென்றுவிடலாம் என்று காத்திருந்தார் தனுஷ். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சூழலைப் புரிந்து கொண்டு, இனிமேல் இதில் கவனம் செலுத்தி பிரயஜோனமில்லை என்று உணர்ந்திருக்கிறார். உடனடியாக, "என்னுடைய தரப்பில் எவ்வித பிரச்சினையுமே இல்லை. அவர்களிடம் பணமில்லை. நான் எனது அடுத்த படத்துக்குச் செல்கிறேன். இப்படம் தொடர்பாக என் மீது எந்தவொரு புகார் வந்தாலும், என்னைக் கேட்டுவிட்டுத் தான் எடுக்க வேண்டும்" என்று தயாரிப்பாளர் சங்கத்தில் பேசியுள்ளார் தனுஷ்.

இதனால், தனுஷ் இயக்கத்தில் உருவாகும் படம் தயாரிப்பாளர் மாறினால் மட்டுமே தொடங்கும் என்ற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. அவரே தயாரிக்க முன்வருவாரா அல்லது வேறொரு தயாரிப்பாளர் வாங்குகிறாரா என்பது விரைவில் தெரியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x