Published : 08 Nov 2018 10:29 AM
Last Updated : 08 Nov 2018 10:29 AM

‘‘இளம் பெண்ணை இப்படி பழியாக்குவது துரதிருஷ்டவசமானது’’ - அந்தரங்க படங்கள் வெளியானது பற்றி அக்‌ஷரா ஹாசன் வேதனை

இளம் பெண்ணை இப்படி பழியாக்குவது துரதிருஷ்டவசமானது என்று அந்தரங்க படங்கள் லீக்கானது தொடர்பாக அக்‌ஷரா ஹாசன் வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷராஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் அண்மையில் இணையத்தில் வெளியானது. அப்படங்கள் வாட்ஸ்-அப் மற்றும் சமூகவலைத்தளத்தில் பெரும் வைரலாக பரவியது. இது தொடர்பான செய்திகளும் இணையத்தில் வெளியானது.

தற்போது இந்த விவகாரம் தொடர்பாக மும்பை காவல் நிலையத்தில் அக்‌ஷராஹாசன் புகார் அளித்திருக்கிறார். அதில் தனது அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அக்‌ஷரா ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அண்மையில் எனது அந்தரங்க புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகின, இதை யார் செய்தார்கள் எதற்காக செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால்,  சில பிறழ் மனம் கொண்டவர்களின் இச்சைக்காக ஒரு இளம் பெண்ணை இப்படி பழியாக்குவது துரதிருஷ்டவசமானது.

ஒவ்வொரு முறையும் அந்தப் படத்தை சிலர் கவர்ச்சித் தலைப்புகளுடன் பகிரும்போதும் நான் ஆழமாகக் காயப்படுத்தப்படுகிறேன். என் மீதான அத்துமீறலில் ஈடுபடுவோர் அதிகமாகின்றனர். நானோ கையறு நிலையில் இருக்கின்றேன்.

இந்த தேசமே #மீடூ என்ற ஓர் இயக்கத்தால் விழித்துக் கொண்டிருக்கும் சூழலில்கூட சில வக்கிர எண்ணம் கொண்டவர்கள் ஒரு இளம் பெண்ணின் புகைப்படங்களைப் பகிர்ந்து அதன் மூலம் மகிழ்ச்சியடைகின்றனர்.

நான் மும்பை போலீஸில் சைபர் செல் உதவியை நாடியுள்ளேன். இந்த புகைப்படங்களை வெளியிட்டது யார் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். விரைவில் உண்மை தெரியவரும்.

இணையவாசிகள் எனது புகைப்படங்களைப் பகிர்ந்து என்னை இழிவுபடுத்துவதில் சுறுசுறுப்பாக இயங்க வேண்டாம் எனக் கேட்கின்றேன். வாழுங்கள் மற்றவர்களையும் மரியாதையுடன் அவர்களது தனிப்பட்ட உரிமைகளில் அத்துமீறாமல் வாழவிடுங்கள்.

இவ்வாறு அக்‌ஷரா ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x