Published : 14 Nov 2018 12:02 PM
Last Updated : 14 Nov 2018 12:02 PM
‘மெளன குரு’ இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிக்கவுள்ள படத்துக்கு ‘மகாமுனி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
அருள்நிதி, இனியா, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மெளனகுரு’. 2011-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
'மௌனகுரு' படத்துக்குப் பிறகு சாந்தகுமாரின் இரண்டாவது படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துவரும் நிலையில் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் புதிய படம் இயக்க ஒப்பந்தமாக உள்ளார் என்றும், அதில் கார்த்தி நாயகனாக நடிக்கலாம் என்றும் நம்பகமான தகவல்கள் கிடைத்தன. ஆனால், அதற்குப் பிறகும் சாந்தகுமார் எந்தவொரு படமுமே இயக்காமல் இருந்தார். இடையே அவரது இயக்கத்தில் ஜீவா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இன்று (நவம்பர் 14) சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தின் பூஜை நடைபெற்றது. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்துஜா நாயகியாகவும், இசையமைப்பாளராக தமனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
நீண்ட வருடங்கள் கழித்து சாந்தகுமார் தனது அடுத்த படத்தை அறிவித்திருப்பதால் ‘மகாமுனி’படம் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT