Published : 17 Nov 2018 02:58 PM
Last Updated : 17 Nov 2018 02:58 PM

எஸ்.எஸ்.ராஜமெளலி மகன் திருமணம்: ஜனவரி மாதம் நடைபெறுகிறது

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயாவின் திருமணம் ஜனவரி மாதம் நடைபெற இருக்கிறது.

‘பாகுபலி’ படத்தின் மூலம் உலகப் புகழ்பெற்றவர் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி. இவர் தற்போது ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம் சரணை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பூஜை, சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், எஸ்.எஸ்.ராஜமெளலியின் மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயாவின் திருமணத் தேதி குறித்த தகவல் கிடைத்துள்ளது. எஸ்.எஸ்.கார்த்திகேயா, ‘பாகுபலி’ படத்தில் இரண்டாவது யூனிட் இயக்குநராகப் பணியாற்றியவர். தொடர்ந்து இயக்குநராக அறிமுகமாவார் என்று பார்த்தால், ஒரு கபடி டீமை விலைக்கு வாங்கி தெலங்கானா ப்ரீமியர் லீக்கில் கலந்து கொண்டார்.

எஸ்.எஸ்.கார்த்திகேயாவுக்கும், பூஜா பிரசாத்துக்கும் கடந்த செப்டம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்தத்தில், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபுவின் அண்ணன் மகளான பூஜா பிரசாத், எஸ்.எஸ்.கார்த்திகேயாவின் நீண்ட நாள் தோழியும் கூட.

இவர்களது திருமணம், அடுத்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. ஹைதராபாத்தில் உள்ள ராமநாயுடு ஸ்டுடியோவில், மாலை 6.30 மணிக்குத் திருமணம் நடைபெற உள்ளது. இதில், தென்னிந்தியத் திரையுலகினர் மட்டுமின்றி, பாலிவுட்டைச் சேர்ந்த நட்சத்திரங்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x