Published : 17 Nov 2018 02:33 PM
Last Updated : 17 Nov 2018 02:33 PM
ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘சர்வம் தாளமயம்’ படத்தைப் பாராட்டியுள்ளார் இயக்குநர் வசந்தபாலன்.
ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சர்வம் தாளமயம்’. டிசம்பர் வெளியீடாக இப்படம் திரைக்கு வரவுள்ளது. முன்னதாக 31-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டு, நல்ல விமர்சனங்களைப் பெற்றது. மேலும், தனக்கு நெருக்கமான நண்பர்களுக்கும் படத்தைத் திரையிட்டுக் காட்டி வருகிறார் ராஜீவ் மேனன்.
முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர் கும்ப்ளே, இயக்குநர் பாலா, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் உள்ளிட்ட பலரும் இப்படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளனர். தற்போது இயக்குநர் வசந்தபாலனுக்கும் ‘சர்வம் தாளமயம்’ படத்தைத் திரையிட்டுக் காட்டியுள்ளார் ஜீ.வி.பிரகாஷ்
இப்படம் தொடர்பாக இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
''நேற்று இரவு ஜீ.வி.யின் அன்பு அழைப்பின் பேரில் ‘சர்வம் தாளமயம்’ திரைப்படத்தைக் காண வாய்ப்பு கிட்டியது. இசைத் திரைப்படங்கள் மீது எனக்கு அலாதியான பிரியம். ‘WHIPLASH’ என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் மீது எனக்கு தணியாத காதல் உண்டு. குரு - சிஷ்ய உறவை மையமாகக் கொண்டு ஒரு இசைப்படத்தை உருவாக்குவது மிகக் கடினமான காரியம்.
அப்படத்திற்கு கதை எழுத, ஆழமான இசையறிவு தேவை. இசைக்குடும்பத்தைச் சேர்ந்த ராஜீவ் மேனன், இந்தக் கதையை மிக அழகாக, ஆழமாக, நுட்பமாக, சுவாரஸ்யமாக எழுதியுள்ளார். நெடுமுடி வேணு, மிருதங்க வித்வானாக வாழ்ந்துள்ளார். தேசிய விருது காத்திருக்கிறது.
ஆயிரம் நமஸ்காரங்கள் வேணு சார். ஜீ.வி., தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞனாக தன் மெய் வருத்தி நடித்துள்ளார். அவர் கண்களில் தெறிக்கும் பதின்வயது குழப்பம், பதட்டம், தடுமாற்றம், அழுகை, வெறி, ஏக்கம், காதல், குருபக்தி இப்படி அத்தனை உணர்வுகளையும் திரையில் கடத்தியுள்ளார். ஜீ.வி. தவிர இன்னொருவர் பீட்டராக வாழ்ந்திருக்க இயலாது. வாழ்த்துகள் ஜீ.வி.
ஏ.ஆர்.ஆர். நம்மை ‘சர்வம் தாளமயம்’ என்று இந்த உலகை நுண்ணிப்பாய்க் கேட்கச் செய்துள்ளார். சற்றே கண்ணை மூடினேன். உலகின் சப்தங்களை இதயத்தால் கேட்கத் தொடங்கினேன். மனசு சொன்னது ‘சர்வம் தாளமயம்’ ''.
இவ்வாறு இயக்குநர் வசந்தபாலன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT