Published : 09 Nov 2018 11:05 AM
Last Updated : 09 Nov 2018 11:05 AM

அதிமுகவுக்கு பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக்: ‘சர்கார்’ சர்ச்சைத் தொடர்பாக குஷ்பு சாடல்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி தினத்தன்று வெளியாகியிருக்கும் படம் ‘சர்கார்’. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி வெளியான இப்படம், தற்போது அரசியல் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

வரலட்சுமியின் பெயர் கோமளவல்லி, அரசு அளிக்கு இலவசங்களைக் கூறுவது உள்ளிட்ட சில காட்சிகளுக்கு அதிமுகவினர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள். மேலும், அமைச்சர்கள் அளித்த பேட்டியைத் தொடர்ந்து, பல ஊர்களில் ‘சர்கார்’ திரையிடப்படும் திரையரங்குகளில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, படக்குழுவினர் அக்காட்சிகளை நீக்க ஒப்புக் கொண்டு அதற்கான செயலில் இறங்கியிருக்கிறார்கள்.

இது தொடர்பாக நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஒரு திரைப்படத்துக்கு தணிக்கை துறை அனுமதி அளித்தபின் இயக்குநரின் சுதந்திரத்தில் அத்துமீறும் உரிமையை எது கொடுத்தது? அல்லது யார் கொடுத்தார்கள்? இதிலிருந்து ஒரு கதையில் வரும் சிறு புனைவுகூட தமிழகத்தைக் கொள்ளையடிக்கும் சின்ன புத்திகாரர்களை அச்சுறுத்துகிறது என்பது தெரிகிறது.

அரசியலும் அதிகாரமும் துஷ்பிரயோகம் செய்யப்படுவது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. கையை முறுக்கிக் கொண்டு, அச்சுறுத்தி, பய உணர்வை ஏற்படுத்துவது இது முதன்முறை அல்லவே. விஜய்யின் முந்தையப் படங்களுக்கும் இப்படியான எதிர்ப்பு கிளம்பியதை நாம் பார்த்திருக்கிறோம். நம் எம்எல்ஏக்களை எது இப்படியெல்லாம் அச்சம் கொள்ளவைக்கிறது? அதிமுகவுக்கு பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக்.

இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x