Published : 20 Nov 2018 02:49 PM
Last Updated : 20 Nov 2018 02:49 PM
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, 50 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை அனுப்ப உள்ளார் ரஜினிகாந்த்.
தமிழகத்தைத் தாக்கிய ‘கஜா’ புயலால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளன. பல ஆண்டுகளாக செலவிட்டு வளர்த்த தென்னை மரங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன. அதிலிருந்து விவசாயிகள் மீள பல ஆண்டுகள் ஆகும். ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் இறந்துள்ளன.
‘கஜா’ புயலில் இருந்து மீண்டுவர தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களால் ஆன உதவிகளைச் செய்து வருகின்றனர். சூர்யா, கார்த்தி, ஜோதிகா உள்ளிட்ட நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்த உதவி செய்யப்பட இருக்கிறது. மேலும், நடிகர் விஜய் சேதுபதி 25 லட்ச ரூபாயும், சிவகார்த்திகேயன் 20 லட்ச ரூபாயும் அளித்துள்ளனர்.
தற்போது விஜய்யும் நிவாரண உதவிகள் செய்யத் தொடங்கியுள்ளார். முதலாவதாக, புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கிக் கணக்குக்கு 4.50 லட்ச ரூபாய் அனுப்பப்பட்டு வருகிறது. இப்பணத்தை வைத்து தேவையான நிவாரண உதவிகளை உடனடியாகத் தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் உதவிகள் செய்வதற்கான முன்னேற்பாட்டைத் தொடங்கியுள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு என்னென்ன தேவைகள் என்பதைத் தன்னுடைய ரசிகர் மன்றங்கள் மூலம் அறிந்து, அந்தப் பொருட்களை வாங்கி அனுப்புகிறார் ரஜினிகாந்த்.
50 லட்ச ரூபாய்க்கு வாங்கப்படும் பொருட்கள், நாளை (நவம்பர் 20) இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல இருக்கின்றன. ரஜினி மக்கள் மன்றத்தினர் மூலம் இந்தப் பொருட்கள் தேவையானவர்களுக்கு வழங்கப்படஉள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT