Published : 15 Nov 2018 03:14 PM
Last Updated : 15 Nov 2018 03:14 PM

ஏ.ஆர்.ரஹ்மானை ஈர்த்த கிராமத்துப் பெண்ணின் காந்தக் குரல்: ஃபேஸ்புக்கில் பாராட்டு

'காதலன்' திரைப்படத்தில் இடம்பெற்ற ‘என்னவளே’ பாடலின் தெலுங்கு வடிவமான ’ஓ செலியா’ பாடலை ஒரு கிராமத்துப் பெண் பாடும் வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் கேரளாவைச் சேர்ந்த ராகேஷ் உன்னி என்ற தொழிலாளி ‘விஸ்வரூபம்’ படத்தில் இடம்பெற்ற ‘உனைக் காணாது நான்’ என்ற பாடலைப் பாடும் வீடியோ வைரலானது. 'விஸ்வரூபம்' படத்தின் இசையமைப்பாளரும் அந்தப் பாடலைப் பாடியவருமான ஷங்கர் மகாதேவன் அந்த வீடியோவைப் பகிர்ந்து பாராட்டியிருந்தார். கமல்ஹாசன் கேரளா சென்றபோது ராகேஷ் உன்னியை நேரில் சந்தித்துப் பாராட்டினார். 

அதே போல மற்றொரு சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 1994ஆம் வெளியான 'காதலன்' திரைப்படத்தில் இடம்பெற்ற ‘என்னவளே’ பாடலின் தெலுங்கு வடிவம் ‘ஓ செலியா’. இந்தப் பாடலை ஒரு கிராமத்துப் பெண் பாடும் வீடியோ சில தினங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வைரலானது. யூ டியூபில் பதிவேற்றப்பட்ட 10 மணி நேரங்களில் 7 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்த வீடியோவை ஏ.ஆர். ரஹ்மான் தனது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் பகிர்ந்து ‘இவர் யாரென்று தெரியவில்லை. அருமையான குரல்’ என்று பாராட்டியுள்ளார். 

அந்தப் பெண்ணின் பெயர் பேபி என்றும் அவர் ஆந்திர மாநிலம் வடிசலேரு கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பேபியின் அற்புதக் குரலால் ஈர்க்கப்பட்ட தெலுங்கு இசையமைப்பாளர் சலூரி கோட்டீஸ்வர ராவ் அவருக்கு தனது இசையில் பாட வாய்ப்பு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x