Published : 26 Oct 2018 09:54 AM
Last Updated : 26 Oct 2018 09:54 AM

வடசென்னையில் சர்ச்சைக்குள்ளான காட்சி, வசனங்கள் நீக்கம்: படக்குழு அறிவிப்பு

'வடசென்னை'யில் சர்க்கைக்குள்ளான காட்சி, வசனங்கள் நீக்கப்பட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 17-ம் தேதி ரிலீஸான படம் ‘வடசென்னை’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், சுப்ரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வடசென்னையில் வசிக்கும் ரவுடிகளை மையப்படுத்திய இந்தப் படத்தில், தங்களைப் பற்றித் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக அங்கு வாழும் மக்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அதுகுறித்து மன்னிப்பு கேட்டார் இயக்குநர் வெற்றிமாறன்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் சில காட்சிகள், மீனவ சமுதாயத்தை இழிவுபடுத்துவதாகவும், அவர்கள் மனம் புண்படும்படியாகவும் இருக்கிறது என்று சில மீனவ அமைப்புகள் ஆங்காங்கே பதிவிட்டு வருகின்றனர். எங்கள் நோக்கம் எப்போதுமே எந்த ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு எதிரான அரசியலோ, சினிமாவோ செய்வதல்ல.

இந்தப் படத்தில் சில காட்சிகள், குறிப்பாக கப்பலில் நடக்கும் முதலிரவுக் காட்சி மீனவ சமூகத்தை மிகவும் இழிவாகச் சித்தரிப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அந்தக் காட்சியைப் படத்தில் இருந்து நீக்குவதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். அதற்கான வேலைகளை இன்று தொடங்கியிருக்கின்றன. படத்தைத் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி இருக்கிறோம். அவர்கள் அதைப் பார்த்து, படத்தில் இருந்து நீக்குவதற்கு 7 முதல் 10 வேலை நாட்களாகும். கண்டிப்பாக அதை நீக்கி விடுவோம். மீண்டும் ஒருமுறை நாங்கள் சொல்வது என்னவென்றால், எங்கள் நோக்கம் யாரையும் இழிவுபடுத்துவதோ அல்லது குறைத்துக் காட்டி சினிமாவில் லாபமோ, பேரோ, புகழோ சம்பாதிப்பதல்ல.

அதேபோல், ‘வடசென்னை’ இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களில், அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும், அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடிகளையும் விவாதிப்பதும், அந்த இளைஞர்கள் எப்படி அங்கிருந்து எல்லாத் துறைகளிலும் நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறார்கள் என்பதையும் பதிவு செய்வதுதான் எங்கள் நோக்கம். இந்தப் படத்தின் பாத்திரப் படைப்புகள், சம்பவங்கள் தனிநபரையோ, சமூகத்தையோ புண்படுத்தி இருந்தால், அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம், மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், 'வடசென்னை' படத்தில் அமீர் ,ஆண்ட்ரியா நடிப்பில் இடம்பெற்றிருந்த முதலிரவுக் காட்சியை படக்குழு நீக்கி விட்டு அதற்குப் பதிலாக அமீர்,ஆண்ட்ரியா நடித்துள்ள வேறு இரு காட்சிகளை இணைத்துள்ளனர். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் வசனங்கள் சிலவும் நீக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்பிற்காக வெயிட்டிங்! - 'சூப்பர் சிங்கர்' செந்தில் கணேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x