Published : 18 Oct 2018 06:45 PM
Last Updated : 18 Oct 2018 06:45 PM

வாயடைத்துப் போகும் அளவுக்கான அன்பை ரசிகர்கள் வழங்கியுள்ளனர்: சிவகார்த்திகேயன்

வாயடைத்துப் போகும் அளவுக்கான அன்பை இசையின் காதலர்கள் மற்றும் ரசிகர்கள் வாயாடி பெத்த புள்ள பாடலுக்கு வழங்கியிருக்கிறார்கள் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கனா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாயாடி பெத்த புள்ள’பாடலை, ஜிகேபி எழுதியுள்ளார். சிவகார்த்திகேயன், வைக்கம் விஜயலட்சுமி இருவரும் பாடிய இந்தப் பாடலின் ஆரம்பத்தில் உள்ள சில வரிகளை, சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாடியுள்ளார். இந்தப் பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில், "சில நேரங்களில், நாம் எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அப்படி வாயடைத்துப் போகும் அளவுக்கான அன்பை இசையின் காதலர்கள் மற்றும் ரசிகர்கள் வாயாடி பெத்த புள்ள பாடலுக்கு வழங்கியிருக்கிறார்கள். தந்தை, மகள் உறவையும், அவர்களின் மகிழ்ச்சியான தருணங்களையும் சொல்லும் இந்தப் பாடல் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் மற்றும் பாடலாசிரியர் ஜி.கே.பி ஆகியோரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

அதோடு, என் மகள் ஆராதனாவுடன் எனக்கு இருக்கும் உறவை காலம் முழுக்க நினைக்க, கிடைத்த இந்தப் பாடலுக்காக அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பாடல் இப்போது யூடியூபில் 50 மில்லியனை தாண்டியிருப்பதும், பலருக்குப் பிடித்தமான பாடலாக இருப்பதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

பாடலைப் பாடிய வைக்கம் விஜயலட்சுமிக்கு நன்றி. ஆராதனாவின் அழகிய குரல் இந்த பாடலின் இனிமைக்கு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, என்னையும், என் மகள் ஆராதனாவையும் இந்த ஒரே பாடலில் பாடவைக்கும் யோசனையைக் கொண்டு வந்த என் நண்பரும் திரைப்பட இயக்குநருமான அருண்ராஜா காமராஜுக்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்" என்கிறார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் மூலம் உருவாகி வரும் 'கனா' படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x