Published : 04 Oct 2018 03:05 PM
Last Updated : 04 Oct 2018 03:05 PM

‘மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் அருண் விஜய்

‘மூடர் கூடம்’ நவீன் இயக்கும் அடுத்த படத்தில் அருண் விஜய் நடிக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் நவீன். விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், இன்றளவும் நினைவுகூரத்தக்கப் படமாகவும் அமைந்துள்ளது. அந்தப் படத்துக்குப் பிறகு ‘கொளஞ்சி’ என்ற படத்தைத் தயாரித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார். இதில், நவீனுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். முழுக்க முழுக்க வெளிநாட்டில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. பிக் பாக்கெட் அடிப்பவராக இந்தப் படத்தில் நடித்துள்ளார் ஆனந்தி.

இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் நவீன். ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படத்தை, அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். ‘அர்ஜுன் ரெட்டி’ ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்நிலையில், இந்தப் படத்தில் அருண் விஜய்யும் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் வில்லனாக நடிக்கிறாரா அல்லது இன்னொரு ஹீரோவா என்ற விவரம் தெரியவில்லை. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அருண் விஜய் நடிப்பில் கடந்த வாரம் ‘செக்கச்சிவந்த வானம்’ படம் ரிலீஸானது. அதில், தியாகு என்ற கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்திருந்தார். அவருடைய நடிப்பு பெரும்பாலானவர்களுக்குப் பிடித்திருந்தது. மேலும், மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘தடம்’ படமும் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x