Published : 06 Aug 2018 11:18 AM
Last Updated : 06 Aug 2018 11:18 AM

தரத்தில் சமரசம் செய்து கொள்ளாதவர் இயக்குநர் ஷங்கர்: ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம்

எப்போதும் தரத்தில் சமரசம் செய்து கொள்ளாதவர் இயக்குநர் ஷங்கர் என்று இசையமைப்பாளர்  ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’. இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் பட வெளியீட்டு தாமதமானது. தற்போது கிராபிக்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால் நவம்பர் 29-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில், ‘2.0’ படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் அளித்துள்ள பேட்டியில் அப்படம் குறித்துக் கூறியிருப்பதாவது:

ஷங்கரைப் பொறுத்தவரை ஒரு நல்ல விஷயம் என்னவெனில், அவர்தான் இது போன்ற படங்களுக்குச் சரியானவர். தரத்தில் நான் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்பதில் ஷங்கர் உறுதியானவர். எனக்கு இந்தத் தரம் வேண்டும் என்பார்.

இப்படம் 3டி-யில் உருவாகியுள்ளது. இப்படத்தில் நான் ஒரு பாடலை அவர் எப்படிப் படமாக்கியுள்ளார் என்று பார்த்தேன். அதில் எவ்விதமான கம்ப்யூட்டர் கிராபிக்ஸும் இல்லை. அவரால் மட்டுமே அப்படிக் காட்சிப்படுத்த முடியும்.

மேலும், ஒட்டுமொத்தக் க்ளைமேக்ஸ் காட்சியும் பிரமிக்க வைக்கக்கூடிய வகையில் இருக்கும். இதெல்லாம் தவிர ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் ஆகியோரும் இருப்பதால் படம் சிறப்பாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x