Published : 16 Aug 2018 01:29 PM
Last Updated : 16 Aug 2018 01:29 PM

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு: ஒரே நேரத்தில் தயாராகும் 2 படங்கள்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, ஒரே நேரத்தில் 2 படங்களாகத் தயாராகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக இருக்கிறது. ‘83 உலகக்கோப்பை’ மற்றும் ‘என்டிஆர் சுயசரிதை’ ஆகிய படங்களைத் தயாரித்துவரும் விப்ரி மீடியா நிறுவனம், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தையும் தயாரிக்கிறது.

விஜய் இயக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது. ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதில், நடிக்கும் நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், இன்னொரு நிறுவனமும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க இருப்பதாக அறிவித்துள்ளது. பேப்பர்டேல் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆ.பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு மனிதருக்கு, குறிப்பாக ஒரு பெண்ணுக்கு, அதிலும் தனித்து வாழும் பெண்ணுக்கு இந்த வாழ்க்கை எத்தகைய இடையூறுகளை ஏற்படுத்தும்...

அந்தக் களத்தை மன உறுதியோடு போராடி, தன் ஒப்பற்ற ஆளுமையால் தடைகளைத் தகர்த்துக் காட்டி, என்றும் வழிகாட்டியாய் வாழ்ந்து, தமிழ்நாடு மட்டுமின்றி, இந்திய மக்களாலும் அதிகம் நேசிக்கப்பட்ட இரும்புப் பெண்மணியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுப்பதற்கான பணிகள் கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஒரு பெண்ணாக, வரலாறு கண்ட மாபெரும் தலைவியின் வரலாற்றை இயக்குவதற்கான இந்த வாய்ப்பை பெருமையாக நினைப்பதைக் காட்டிலும், கடமையாக உணர்கிறேன். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் உருவாகும் இந்தப் படத்தில், முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கின்றனர். ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்து அடுத்த மாதம் 20-ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. இவர்தான் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘சக்தி’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x