

கிச்சா சுதீப், கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்ற ‘மேக்ஸ்’ படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கி இருந்தார்.
வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், சம்யுக்தா ஹோர்னாட், ஆடுகளம் நரேன், சுனில் உட்பட பலர் நடித்திருந்தனர். கன்னடம், தமிழ், தெலுங்கில் உருவான இப்படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் அடுத்தப் படத்தை அறிவித்தார் சுதீப்.
இப்படத்துக்கு ‘மார்க்’ என தலைப்பு வைத்துள்ளனர். இதில் அஜய் மார்க்கண்டேயா என்ற போலீஸ் அதிகாரியாக சுதீப் நடிக்கிறார். ‘மேக்ஸ்’ படத்திலும் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அதனால் இது ‘மேக்ஸ்’ படத்தின் அடுத்த பாகமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், இது வேறு கதை என்கிறார்கள். இதற்கிடையே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கிறிஸ்துமஸை முன்னிட்டு இப்படம் வெளியாக இருக்கிறது.