

குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள ‘கிணறு’ படம் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாளை வெளியாகிறது.
ஹரிகுமார் இயக்கியுள்ள இப்படத்தை மெட்ராஸ் ஸ்டோரிஸ் என்ற நிறுவனம் சார்பில் சூர்யா நாராயணன் மற்றும் வினோத் சேகர் தயாரித்துள்ளனர். கவுதம் வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். புவனேஷ் செல்வநேசன் இசை அமைத்துள்ளார்.“ஒரு கிராமத்தில் 4 சிறுவர்கள், அருகிலுள்ள வீட்டுக் கிணற்றில் விளையாடுவதற்காகச் செல்கிறார்கள்.
அங்கு அவர்கள் அவமானப்படுத்தப்படுவதை அடுத்து, தங்களுக்காகவே ஒரு கிணறு தோண்ட முடிவு செய்கிறார்கள். ஆனால், மூத்த தலைமுறையின் நம்பிக்கைகள் மற்றும் தடைகள் அவர்களின் முன்னே நிற்கின்றன. நிலத்தில் தண்ணீர் தேடும் அறிவு, கருவிகளுக்கான சேமிப்பு, பெரியவர்களை நம்ப வைப்பது, பயத்தைத் தாண்டி கனவு நோக்கி ஓடும் அவர்களின் பயணம்தான் படம்” என்கிறது படக்குழு.