கலை இயக்குநர் தோட்டாதரணிக்கு செவாலியர் விருது

கலை இயக்குநர் தோட்டாதரணிக்கு செவாலியர் விருது

Published on

பிரான்ஸ் அரசின் உயரிய செவாலியர் விருது பிரபல ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் அரசு கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கவுரவிக்கும் விதமாக செவாலியர் விருதை வழங்கி வருகிறது. இவ்விருதை தமிழ்நாட்டில் நடிகர் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் உள்பட சிலர் பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த விருது பிரபல திரைப்பட கலை இயக்குநர் தோட்டாதரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் நவ.13 அன்று ‘லா மேசான்’ (La Maison) என்ற ‘கஃபே–நூலக’த்தை இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தியெரி மாத்தோ திறந்து வைக்கிறார். சென்னை மற்றும் புதுச்சேரி பிரான்ஸ் துணைத் தூதர் எத்தியென் ரோலான்-பியெக், அலையன்ஸ் பிரான்சைஸ் தலைவர் டி.கே.துர்கா பிரசாத், இயக்குநர் டாக்டர் பாட்ரிசியா தேரி–ஹார்ட் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். அந்த நிகழ்வில் தோட்டாதரணிக்கு செவாலியர் விருது வழங்கப்பட இருக்கிறது. கலைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக, இவ்விருது வழங்கப்படுகிறது.

இதற்கிடையே அங்கு, தோட்டா தரணியின் ஓவிய கண்காட்சி நடைபெற்று வருகிறது. நவ.14-ம் தேதி வரை இக்கண்காட்சி அங்கு நடைபெறும். ‘எனது சினிமா குறிப்புகளில் இருந்து’ என்ற தலைப்பிலான இக்கண்காட்சியை இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் பார்வையிட்டு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிப் படங்கள் மட்டுமின்றி பிரெஞ்சு, இத்தாலியப் படங்களுக்கும் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ள தோட்டாதரணி, ‘நாயகன்’ படத்துக்காகப் மும்பை தாராவி செட், ரஜினி நடித்த ‘சிவாஜி’, மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ போன்ற படங்களுக்காக பிரம்மாண்ட செட்கள் அமைத்து அசத்தியவர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in