

நடிகர் சிரஞ்சீவியின் புகைப்படம், குரல், பெயரை அனுமதியின்றி பயன்படுத்த நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இணையதளங்களில் தங்களது பெயர் உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, திரைப் பிரபலங்கள் வழக்கு தொடர்ந்து வருகின்றனர். அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், கரண் ஜோஹர், நாகார்ஜுனா, அக் ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன், ஆஷா போன்ஸ்லே உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அவர்களுக்குச் சாதகமான தீர்ப்பு வழங்கப் பட்டது.
இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவியும் ஐதராபாத், சிட்டி சிவில் நீதிமன்றத்தில், தனது அடையாளம் மற்றும் புகழை, அதிகாரப் பூர்வமின்றி வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க கோரி மனுதாக்கல் செய்தார். அதில், ஆன்லைன் ஆடை விற்பனையாளர்கள், தனது அனுமதியின்றி, தன்னை அழைக்கும் மெகா ஸ்டார், சிரு உள்ளிட்ட பெயர்களையும் குரல்களையும் விளம்பரங்களுக்குப் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் இதுபோன்ற அதிகாரப்பூர்வமற்ற விளம்பரங்கள், தன்னுடைய சமூக, பொருளாதாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதோடு தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகவும் கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.சஷிதர் ரெட்டி, சிரஞ்சீவியின் புகைப்படம், பெயர், அவருடைய அடையாளம், குரல் உள்ளிட்டவற்றை வர்த்தக ரீதியாக எந்த அமைப்பும் நிறுவனமும் பயன்படுத்தக் கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.