Published : 30 Aug 2018 09:16 PM
Last Updated : 30 Aug 2018 09:16 PM

‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே.சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி

இந்தியத் திரை உலகின் சூப்பர் ஸ்டாராக வலம்வந்த அமிதாப் பச்சன், முதன்முதலாகத் தமிழ்ப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறார். அதன் ஃபர்ஸ்ட் லுக்கை ரஜினி ரிலீஸ் செய்தார்.

இந்தியத் திரை உலகின் முன்னணி நடிகராக, அகில இந்திய சூப்பர் ஸ்டாராக வலம்வந்த அமிதாப் பச்சன், விரைவில் தமிழில் நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து, தமிழ்வாணன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

திருச்செந்தூர் முருகன் புரடக்‌ஷன்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் five element pictures இணைந்து தயாரிக்கும், மிகப் பிரமாண்டமான இந்த படத்துக்கு சிவாஜி கணேசன் நடித்த பிரபல படமான ‘உயர்ந்த மனிதன்’ என்ற பெயர் தலைப்பிடப்பட்டு உள்ளது.

தமிழ் , இந்தி இரு மொழிகளில் ‘உயர்ந்த மனிதனின்’ படமாக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. மற்ற நடிக, நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர் தேர்வு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

‘கள்வனின் காதலி’ படத்தை இயக்கிய தமிழ்வாணன் இந்த படத்தை இயக்குகிறார்.

“உலகெங்கும் புகழ் பெற்று , இந்திய திரை உலகின் முடி சூடா மன்னனாக திகழும் அமிதாப் சாருடன் பணிபுரிவது மிகப்பெரிய பாக்கியம். தமிழில் இவர் நடிக்கும் முதல் படம் என் இயக்கத்தில் தான் என்பதே எனக்கு மிகப்பெரிய பெருமை" என்கிறார் இயக்குனர் தமிழ்வாணன்.

"ஒரு துணை இயக்குனராக திரை உலகில் கால் பதிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு அமிதாப் சார் மீது அளவில்லாத பிரியம். அவருடன் இணைந்து நடிப்பது தான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரம்" என்று பெருமையுடன் கூறுகிறார் எஸ்.ஜே.சூர்யா.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸை அமிதாப்பின் நெருங்கிய நண்பரான ரஜினியை வைத்து ரிலீஸ் செய்ய முடிவெடுத்து, அவரிடம் தேதி கேட்டு படக்குழுவினர் சந்தித்தனர். ரஜினி ‘உயர்ந்த மனிதன்’ பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் செய்யும் வீடியோவை எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், தனக்கே உரிய பாணியுடன் வரவேற்கும் ரஜினி சூர்யாவிடம் கேட்கும் முதல் கேள்வி “நைஸ் ஜென்டில்மேன் அவர் எப்படி, அவரை சம்மதிக்க வைத்தீர்கள்” என்பதே. “2 வருஷம் போராட்டம் சார்” என்று சூர்யா சொல்ல ‘ஓஹோ’ என்று ஆர்வமாக ரஜினி கேட்க, “நல்ல கதை கொண்டு வந்தார் சார்” என்று தனது கதாசிரியரை அறிமுகப்படுத்தினார் சூர்யா.

பின்னர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ரஜினி ரிலீஸ் செய்தார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஸ்டில்லை பார்த்து அமிதாப் பக்கத்தில் சூர்யா நிற்கும் ஸ்டில்லில் எஸ்.ஜே.சூர்யா நிற்கும் இடத்தை சுட்டிக்காட்டி “இந்த இடத்தில் நான் இருக்கணும்னு எப்பவோ ஆசைப்பட்டேன்” என்று பொறாமை கலந்த சிரிப்புடன் ரஜினி சொல்ல சிரித்தபடியே சூர்யா கையெடுத்து கும்பிட்டார்.

“என்னுடைய நண்பர் அமிதாப் தமிழ்ப் படத்தில் நடிப்பது தமிழ் திரைப்பட உலகத்திற்கே பெருமை, அதே நேரத்தில் நண்பர் எஸ்.ஜே.சூர்யா இந்தி உலகத்திற்கு அறிமுகம் ஆவதில் மிக்க மகிழ்ச்சி. அவர் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகள்” என ரஜினி வாழ்த்தி வாய்ஸ் கொடுத்துள்ளதை பெருமையுடன் எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x