Published : 11 Jul 2018 06:03 PM
Last Updated : 11 Jul 2018 06:03 PM

மெய்சிலிர்க்க வைத்த தாய்லாந்து குகை சிறுவர்கள் மீட்பு: தயாராகிறது ஹாலிவுட் திரைப்படம்

உலகையே மெய்சிலிர்க்க வைத்த தாய்லாந்து குகையில் இருந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம் விரைவில் ஹாலிவுட் திரைப்படமாகிறது. நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தத்ரூபமாக படமாக்க ஹாலிவுட் வட்டாரம் தயாராகி வருகிறது.

தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் மியான்மர் எல்லையில் தாம் லுவாங் என்ற குகையில் உள்ளது. சுமார் 10 கி.மீ நீளமுடைய இந்த குகை ஆசியாவிலேயே மிகப்பெரிய குகையாகும். ‘வைல்டு போர்’ என்ற கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த, 11 வயது முதல் 16 வயது கொண்ட சிறுவர்கள் கடந்த 23-ம் தேதி இந்தக் குகைக்கு சென்றனர். இந்த சிறுவர்களுக்கு உதவியாக துணைப் பயிற்சியாளர் எக்காபோல் சந்தாவாங் உடன் சென்றார்.

ஆனால், இந்தக் குகை குறித்து அதிகம் அறிந்திராத இந்தச் சிறுவர்களும், துணைப் பயிற்சியாளரும் உள்ளே சென்று மாட்டிக்கொண்டனர். இவர்கள் சென்ற சமயம் அங்கு திடீர் மழை பெய்து வெள்ள நீர் குகைக்குள் சூழ்ந்து கொண்டது. நீரும், சேறுமாகக் குகை சூழ்ந்ததால் குகையைவிட்டு வெளியேற முடியாத சூழல் அவர்களுக்கு ஏற்பட்டது. இதனால் இரண்டு வாரங்களாக உணவும், நீரும் இன்றி அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டனர்.

தாய்லாந்து கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மீட்பு குழுவினர் அவர்களை மீட்டனர். குகையில் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரையும் உயிருடன் வெற்றிகரமாக மீட்டு வந்ததை உலகம் முழுவதும் மக்கள் வரவேற்று வருகின்றனர். மீட்பு குழுவினருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

இந்த மீட்பு பணிகள் நடந்து வந்தவேளையில் சிறுவர்கள் உயிர் பிழைக்க பிராத்தனைகள் நடந்தன. உலகம் முழுவதும் இந்த சம்பவம் மக்களை மெய் சிலிர்க்க வைத்தது.

இந்நிலையில் தாய்லாந்து குகையில் இருந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவத்தை திரைப்படமாக எடுக்க ஹாலிவுட்டை சேர்ந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

‘பியூர் பிளிக்ஸ் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. “God’s Not Dead” என்ற பெயரில் ‘கடவுளின் மரணமில்லை’ என்ற பெயரில் தாய்லாந்து குகையில் இருந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம் முழுவதும் கதையாக்கப்பட உள்ளது.

சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் இந்த படத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மிச்சேல் ஸ்காட் தாய்லாந்தைச் சேர்ந்தவர். மீட்பு பணிகள் நடந்தபோது அவர் அங்கு இருந்து அதனை பார்வையிட்டுள்ளார். அதன் அடிப்படையிலேயே இதனை திரைப்படமாக்க அவர் முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘உலக அளவில் மிகப்பெரிய வீரதீரச் செயலாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. அங்கு பார்த்தபோது மெய் சிலிர்த்துபோனேன். இதுபோன்ற உத்வேகமிக்க செயலை நான் பார்த்ததில்லை. தன்னார்வத்துடன் நடந்த இந்த மீட்பு பணி உலக வரலாற்றில் ஒரு மைல்கல். எனவே தான் இதனை திரைப்படமாக்க முடிவு செய்தோம்’’ என்றார்.

இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள், கதை உள்ளிட்டவை இன்னமும் முடிவாகவில்லை. எனினும் விரைவில் இந்த திரைப்படத்தை தயாரித்து வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x